வேலூர் மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது.
இதுகுறித்து கலெக்டர் நந்தகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
இலவச பயிற்சி வகுப்பு
வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தொகுதி–2–க்கான (டி.என்.பி.எஸ்.சி –சி.சி.எஸ்.இ.–2 –2015) தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நாளை (திங்கட்கிழமை) தொடங்கி தொடர்ந்து சனி மற்றும் ஞாயிறு ஆகிய 2 நாட்களில் மட்டும் நடக்கிறது.
இந்த சிறப்பு பயிற்சியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ–மாணவிகள் வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம்.
இந்த பயிற்சி வகுப்புகள் சிறந்த ஆசிரியர்களை கொண்டு நடத்தப்படுகிறது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பயிற்சி வகுப்பு நடக்கிறது.
புத்தகங்கள்
பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவ– மாணவிகள் அரக்கோணம், நெமிலி, காவேரிப்பாக்கம், சோளிங்கர், வாலாஜா, ஆற்காடு, திமிரி, கணியம்பாடி, வேலூர், காட்பாடி, கே.வி.குப்பம், மாதனூர், அணைக்கட்டு, குடியாத்தம், பேரணாம்பட்டு, ஆலங்காயம், திருப்பத்தூர், நாட்டறம்பள்ளி, ஜோலார்பேட்டை மற்றும் கந்திலி ஆகிய 20 பஞ்சாயத்து அலுவலகங்களில் இயங்கும் தன்னார்வ பயிலும் வட்ட நூலகங்களை அணுகி, போட்டி தேர்வுக்கான புத்தகங்களை பயன்படுத்தி கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.