குரூப் 2 தேர்வுக் கட்டண சலுகை கோரியதில், தவறான தகவல் அளித்ததால், கவுன்சிலிங்கில் பங்கேற்க அனுமதிக்க முடியாது என்ற தனி நீதிபதி உத்தரவை எதிர்த்த வழக்கில் டி.என்.பி.எஸ்.சி., தலை
வருக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட் கிளை நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மதுரை பழங்காநத்தம் பாலகண்ணன். பி.இ., படித்துள்ளார். ஒருங்கிணைந்த சிவில் சர்வீஸ் (குரூப் 2ஏ) நேரடி நியமன தேர்வுக்கு டி.என்.பி.எஸ்.சி., தலைவர் 2014 பிப்.,6 ல் அறிவிப்பு வெளியிட்டார். ஆன்லைன் மூலம் பாலகண்ணன் விண்ணப்பித்தார். ஜூன் 29 ல் தேர்வு நடந்தது. ரேங்க் பட்டியலில் பாலகண்ணன் பெயர் 1151 இடத்தில் இருந்தது.
சான்றிதழ் சரிபார்ப்பின்போது, ஆன்லைனில் விண்ணப்பித்தபோது தேர்வு கட்டணத்திலிருந்து விலக்கு கோருகிறீர்களா? இல்லையா? என்ற விபரத்தில் இல்லை என்பதற்கு பதில், ஆம் என குறிப்பிட்டுள்ளீர்கள். தேர்வுக் கட்டணம் செலுத்தாததால் கவுன்சிலிங்கில் பங்கேற்க அனுமதிக்க முடியாது என டி.என்.பி.எஸ்.சி., தலைவர் மறுத்தார்.
அந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, ஐகோர்ட் கிளையில் பாலகண்ணன் மனு செய்தார். தனி நீதிபதி, "மனுதாரர் ஏற்கனவே மூன்று முறை கட்டணச் சலுகையுடன் தேர்வு எழுதியுள்ளார். நான்காவது முறை எழுதும்போது கட்டணம் செலுத்த வேண்டும். மனுதாரர் தவறுதலாக கட்டண விலக்கு கோரியுள்ளார். தவறு நேராமல் விண்ணப்பிக்க வேண்டியது, மனுதாரர் கடமை. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது" என்றார்.
இதை எதிர்த்து பாலகண்ணன், மூன்று முறைக்கு மேல் தேர்வு எழுதிய விபரத்தை விண்ணப்பத்தில் குறிப்பிட்டேன். கட்டண விபரம் பூர்த்தி செய்யும்போது தொழில்நுட்ப கோளாறால் தவறு ஏற்பட்டது. இதை காரணமாகக் கொண்டு துவக்கத்திலேயே மனுவை நிராகரித்திருக்க வேண்டும். தேர்வில் பங்கேற்க அனுமதித்து விட்டு, பணி வாய்ப்பு கிடைக்கும் சூழ்நிலையில் நிராகரித்தது தவறு. தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும், என மேல்முறையீடு செய்தார்.
டி.என்.பி.எஸ்.சி., தலைவருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன், வி.எஸ்.ரவி பெஞ்ச் உத்தரவிட்டது. அரசு வக்கீல் கிருஷ்ணதாஸ் மற்றும் மனுதாரர் வக்கீல் அழகுமணி ஆஜராகினர்.