பள்ளிக்கூட ஆசிரியர்கள், மாணவர்களிடம் டெங்கு, பன்றி காய்ச்சல் அறிகுறி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் கடிதம்
டெங்கு, பன்றி காய்ச்சல் அறிகுறி பற்றிய விழிப்புணர்வை பள்ளி
க்கூட ஆசிரியர்கள், மாணவர்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் கடிதம் அனுப்பி உள்ளார்.
பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
டெங்கு, பன்றி காய்ச்சல்
டெங்கு காய்ச்சல் மற்றும் பன்றி காய்ச்சல் தொடர்பான நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கீழ் காணும் அறிவுரைகளை மாவட்ட கல்வி அதிகாரிகள் மூலம் அனைத்து பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும். தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், ஆசிரியைகள், மாணவர்கள், மாணவிகள் ஆகியோரிடம் கீழ்கண்டவற்றை எடுத்து உரைக்க வேண்டும். அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
* ஆசிரியர்கள், மாணவர்கள் அவ்வப்போது கைகளை சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும். சாப்பிடுவதற்கு முன்பாக கண்டிப்பாக கை கழுவவேண்டும்.
* வகுப்பறைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
* வகுப்பறைகள் மற்றும் கழிவறைகளை சுற்றி தண்ணீர் தேங்கி நிற்கக்கூடாது. அவ்வாறு தண்ணீர் தேங்கி இருந்தால், உடனே தண்ணீரை அகற்றுவதற்கு ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்
* பள்ளிக்கூடத்தில் குடிநீர் பானைகள், தண்ணீர் தொட்டிகள் ஆகியவற்றை மூடி வைக்கவேண்டும். அதனால் கொசு உற்பத்தி பெருக்கத்தை தடுக்க முடியும்.
* பன்றி காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் அறிகுறி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்.
* மாணவர்கள் தங்கள் பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் டெங்கு, பன்றி காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வை கொண்டுவர வேண்டும்.
* ஆசிரியர்களுக்கோ அல்லது மாணவர்களுக்கோ கடுமையான காய்ச்சல், சளி, இருமல் ஏற்பட்டால் உடனே அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் அல்லது அரசு அரசு மருத்துவமனைக்கு செல்லவேண்டும்.
* மாணவர்கள் எந்த சூழ்நிலையிலும் சுயமருத்துவம் செய்யக்கூடாது. அதுபோல வீட்டில் உள்ளவர்களுக்கு கடும் காய்ச்சல், இருமல் இருந்தால் அதை ஆசிரியர் அல்லது தலைமை ஆசிரியரிடம் தெரிவித்து உங்கள் குடும்பத்தினர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வழிவகை செய்யுங்கள்.
* திண்டுக்கல், ஆண்டிப்பட்டி, தேனி, கோவை, கரூர், நாகப்பட்டினம், திருநெல்வேலி, திருவாரூர், விருதுநகர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிக்குழந்தைகளுக்கும், ஆசிரியர்களுக்கும் டெங்கு, பன்றி காய்ச்சல் அறிகுறி தொடர்பாக அதிக முக்கியத்துவம் அளியுங்கள்.
குடற்புழு நீக்க மருந்து
* இன்று (செவ்வாய்க்கிழமை) குடற்புழு நீக்க நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மருந்து சுகாதாரத்துறை சார்பில் கொடுக்கப்படுகிறது. அதை மாணவர்களுக்கு கட்டாயம் கொடுக்கவேண்டும்.
* குடற்புழு நீக்க மருந்து சாப்பிட விடுபட்ட மாணவர்களுக்கு 13-ந் தேதி சிறப்பு முகாம் நடக்கிறது.
இவ்வாறு ச.கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.