திருவள்ளுவர் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரிகளின் உதவிப் பேராசிரியர்கள் கல்வித்தகுதி பற்றிய ஆய்வை 6 மாதத்துக்குள் முடிக்கவேண்டும் யு.ஜி.சி.க்கு ஐகோர்ட்டு உத்தரவு
திருவள்ளுவர் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளின் உதவிப் பேராசிரியர்களின் கல்வித் தகுதி பற்றிய ஆய்வை 6
மாதத்துக்குள் முடிக்கவேண்டும் என்று யு.ஜி.சி.க்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பலருக்கு தகுதி இல்லை
சென்னை ஐகோர்ட்டில் வேலூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியர் ஐ.இளங்கோவன் தாக்கல் செய்த பொதுநலன் மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கல்லூரிகளில் ஆசிரியர், உதவிப் பேராசிரியர் நியமனங்களுக்கென்று கல்வித் தகுதியை நிர்ணயித்து பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) விதிகளை வகுத்தளித்துள்ளது. அதற்கான விதிகள் அமலில் உள்ளன.
இந்த நிலையில் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உதவிப் பேராசிரியர் நியமனம் நடந்துள்ளது. அவர்களில் கால்பங்கு ஆசிரியர்களுக்கு மட்டுமே விதிகளின்படி தகுதி உள்ளது.
தீர்மானம்
இந்த நிலையில் அந்தப் பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழு கூட்டம் நடந்தது. அதில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. அதில், சரியான கல்வித் தகுதியை பெறாத ஆசிரியர்கள் அதற்கான தகுதியை இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் பெற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தத் தீர்மானம் சட்ட விரோதமானது. எனவே அதை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஆய்வு செய்வோம்
இந்த மனுவை தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் விசாரித்தனர். மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், ‘‘ஆசிரியர்களை நியமிக்கும்போதே யு.ஜி.சி. விதிகளை பின்பற்றியிருக்க வேண்டும். அதை பின்பற்றாமல் நியமித்ததே தவறானது. எனவே, நியமனம் பெற்ற பிறகு கல்வித் தகுதியை பூர்த்தி செய்யலாம் என்ற கருத்துக்கே இடமில்லை’’ என்று வாதிட்டார்.
பதில்வாதம் புரிந்த பல்கலைக்கழக வக்கீல், ‘‘கல்லூரிகளில் நடந்த நியமனங்கள் குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆவணங்களை சென்னைக்குக் கொண்டு வர வேண்டியதுள்ளது. அந்த நடவடிக்கையை துரிதப்படுத்த இருக்கிறோம். இந்த ஆய்வுக்குப்பிறகுதான் முழு உண்மை தெரிய வரும்’’ என்று தெரிவித்தார்.
6 மாதங்களுக்குள்
அதைத்தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
இந்த வழக்கை இந்த நிலையில் பொதுநல வழக்காக எடுத்துக் கொள்ள முடியாது. ஆசிரியர் பணி நியமனம் தொடர்பான ஆய்வை, யு.ஜி.சி.யும் பல்கலைக்கழகமும் துரிதமாக எடுக்க வேண்டியதுள்ளது. யு.ஜி.சி.யின் வேண்டுகோளின்படி, அதற்கான ஆவணங்களை பல்கலைக்கழகம் விரைந்து கொண்டு வரவேண்டும்.
இந்த விஷயத்தில் பல்கலைக்கழகம் ஒத்துழைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். 6 மாதங்களுக்குள் ஆய்வுப் பணியை முடிக்க யு.ஜி.சி. முயற்சிக்க வேண்டும். வழக்கு முடித்து வைக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.