கிராம நிர்வாக அலுவலர்களைத் தேர்வு செய்வதற்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் வரும் 27-ஆம் தேதி தொடங்கும் என்று, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) தெரிவித்தது.
இதுகுறித்து, தேர்வாணையத்தின் செயலாளர் விஜயகுமா
ர் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த 2013-14-ஆம் ஆண்டுகளுக்கான கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு ஜூன் 14-ல் நடத்தப்பட்டது. அதற்கான தேர்வு முடிவுகள் கடந்த டிசம்பர் 15-ல் வெளியிடப்பட்டது.
எழுத்துத் தேர்வில் தாற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு முறையிலான ஒதுக்கீடு ஆகியன வரும் 27 முதல் பிப்ரவரி 12 வரை நடைபெறும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது.
சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் தரவரிசை அடங்கிய தாற்காலிகப் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.