மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்தால் இலவச பஸ் பாஸ் ரத்து: தமிழக அரசு உத்தரவுகல்லூரி மாணவர்களிடையே வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. படிக்கட்டு பயணங்களால் மாணவர்கள் உயிரிழப்புகளும் தொடர் கதையாக உள்ளன. இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும் மாணவர்களை கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை உருவாக, தமிழக அரசு ஒரு குழுவை அமைத்தது. அந்த குழு அளித்த பரிந்துரை அடிப்படையில் பு
திய வழிகாட்டுதல் நெறிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த வழி காட்டுதல் நெறிமுறைகள் அனைத்து கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது. உயர் கல்வித்துறை இதை அனுப்பி உள்ளது. அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:–
மாணவர்கள் சிறிய அளவிலான அசம்பாவித சம்பவங்களில் ஈடுபட்டால் அவர்களுடைய பெற்றோர் கல்லூரிக்கு வரவழைக்கப்பட்டு மாணவர்களுக்கு அறிவுரை வழங்க கேட்டுக் கொள்ளப்படுவார்கள். 2–வது முறையாக வன்முறையில் ஈடுபட்டால் அந்த மாணவரின் அடையாள அட்டை, இலவச பஸ்பாஸ் ஆகியவை குறிப்பிட்ட காலத்துக்கு பறிமுதல் செய்யப்படும்.
தொடர்ந்து வன்முறையில் ஈடுபடும் மாணவரின் ‘டி.சி’ கொடுக்கப்பட்டு, படிப்பில் இருந்தும் அவர் நீக்கப்படுவார். குற்றச் செயல்களில் ஈடுபட்டால் வேறு எந்த கல்லூரியிலும் சேர்ந்து படிக்க முடியாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களை கண்காணிக்க கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்படும்.
மாணவர்கள் பஸ் படிக்கட்டில் பயணம் செய்வதால் ஏற்படும் விபத்தை தடுக்க மாநகர போக்குவரத்து அதிகாரிகள் போலீசார் அடங்கிய கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்களை கண்டறிந்து சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வரிடம் தெரிவிக்கும். அதன் பேரில் அந்த மாணவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்ந்து பஸ்படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவனின் இலவச பஸ்பாஸ் ரத்து செய்யப்படும். பஸ் தின கொண்டாட்டத்துக்கு தடை விதிப்பது, கல்லூரி மாணவர்களுக்கு தனியாக மாநகர பஸ்களை இயக்குவது அடிக்கடி பிரச்சினை ஏற்படும் வழித்தடங்களில் கதவு வைத்த பஸ்களை இயக்குவது ஆகிய நடைமுறைகளை பின்பற்றும்படி அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.