முதலில் கேட்பதற்கு அலட்சியமாகத் தோன்றலாம். ஆனால், இந்த ஆய்வுக் கண்டுபிடிப்பால் புற்றுநோய் சிகிச்சை, உயிரித் தொழில்நுட்பம், உணவு பதப்படுத்துதல் என்று பல துறைகள் பயனடையக்கூடும். அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அரசுகளின் உதவியுடன் நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சி
யில், அவித்த முட்டையை மீண்டும் பழையபடி அவிக்கப்படாத முட்டையாக மாற்ற முடியும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர்.
கோழி முட்டையின் வெள்ளைக் கரு திரவம் வெந்த பிறகு முற்றிலும் மாறிப்போய்விடுவதால், அதை திரும்பவும் பழைய நிலைக்குக் கொண்டுவரவே முடியாது என்றுதான் நீங்கள் நினைப்பீர்கள். ஆனால், வழக்கமான யூரியா (இது மனித சிறுநீரில் நிறையவே இருக்கிறது) மற்றும் வார்டெக்ஸ் திரவ இயந்திரம் என்ற ஹைடெக் இயந்திரம் ஆகியவற்றின் உதவியுடன் மீண்டும் முட்டையின் புரதங்களை பழைய நிலைக்கே கொண்டுவர முடிந்திருக்கிறது. ஆய்வுக்கூடத்தில் வீணாகும் புரதங்களை மீண்டும் பயன்படுத்துவதற்காக ஒரு முறையைக் கண்டுபிடிக்க ஆராய்ச்சி செய்தோம். அதற்கு ஒரு உதாரணமாகவே கோழி முட்டையைப் பயன்படுத்தினோம். என்கிறார் ஆய்வுக் குழுவில் இருந்த கலிபோர்னியா பல்கலைக்கழக வேதியியல் பேராசிரியரான கிரிகோரி வெய்ஸ். வீணாகும் புரதங்களை திரும்பவும் பயன்படுத்தும் முறை, அறிவியல் ஆராய்ச்சியை மட்டுமல்ல, பல தொழிற்சாலைகளில் உற்பத்தி முறைகளையே புரட்சிகரமான முறையில் மாற்றியமைக்கும் என்கின்றனர் ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகள். உதாரணமாக, புற்றுநோய் எதிர்ப்புக்கான ஆராய்ச்சிகளில், வெள்ளெலிகளின் கருப்பை செல்களை விஞ்ஞானிகள் பயன்படுத்துகின்றனர். இதற்கு கூடுதல் செலவு ஆனாலும், வெள்ளெலிகளின் செல்கள் புரதத்தை வீணடிப்பதில்லை என்பதுதான் காரணம். இந்த முறையை கைவிட்டு, கலிபோர்னியா விஞ்ஞானிகள் உருவாக்கிய புதிய முறையைக் கையாண்டால் மருத்துவ ஆராய்ச்சிக்கான செலவு கணிசமாகக் குறையும். இந்த முறையால் தொழிற்சாலைகளில் புரதங்களை உற்பத்தி செய்யும் முறை அடியோடு மாற்றம் காணும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.