பொதுமேடைகளில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆங்கில சொற்பொழிவாற்ற அதிநவீன வகை ‘டெலிபிராம்ப்டர்’ உதவியாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.
பொது மேடைகளில் இந்தி மொழியில் சரளமாக தனக்கே உரித்தான பாணியில் பேசுவதில் பிரதமர் மோடி மிகவும் பிரபலமாக உள்ளார்
. இவர் கடந்த ஆகஸ்ட் 15-ல் டெல்லி செங்கோட்டையில் கொடி ஏற்றிய பின், கைகளில் எந்தக்
குறிப்புகளும் இன்றி, இந்தியில் அளித்த ஆவேசமான உரை பலரையும் பிரமிக்க வைத்தது. ஏனெனில், அங்கு பெரும் பாலான பிரதமர்கள் முன்கூட்டியே எழுதி வைத்த உரைகளை பார்த்துப் படித்து விடுவது வழக்கம்.
இந்தி அளவுக்கு ஆங்கிலத் திலும் இடர்பாடுகள் இன்றி உரை யாற்றுவதற்காக, ‘டெலிபிராம்ப்டர்’ கருவியை பிரதமரானது முதலே பயன்படுத்தி வருகிறார் மோடி.
ஜூலை மாதம் இஸ்ரோ சார்பில் பி.எஸ்.எல்.வி ராக்கெட் ஏவப்பட்ட போது, விஞ்ஞானிகளிடையே உரை யாடிய போது முதன் முறையாக பிராம்ப்டரைப் பயன்படுத்தினார் மோடி. அடுத்து, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் டெல்லி வருகையின் போது, அவருடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தபோதும் பிராம்ப்டரை பயன்படுத்தினார் மோடி.
பிறகு, கடந்த ஜனவரி 11-ம் தேதி காந்திநகரில் நடந்த ‘வைப்ரண்ட் குஜராத்’ சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஆங்கிலத்தில் பேசுவதற்காக பிராம்ப்டரை மோடி பயன்படுத்தினார். இந்தக் கூட்டத்திலும் மோடியின் ஆங்கில உரையை கேட்டு பலரும் ஆச்சரியமடைந்தனர். அத்துடன் மோடியின் சிறப்பான ஆங்கில உரையின் ரகசியம் பரவலாக சமூக இணயதளங்களில் விவாதிக் கப்பட்டது.
ஆங்கிலத்தில் உரை இந்தியில் பதில்
இந்தக் கருவியை கடைசியாக மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமா வருகையின் போது செய்தியாளர்களிடையே ஆங்கிலத்தில் உரையாற்றவும் பயன்படுத்தினார். அதை பற்றி அறியாத சில பத்திரிகையாளர்கள், ஆங்கிலத்திலேயே மோடியிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு திடீர் என மோடி இந்தியில் பதில் அளிக்க வேண்டியதாயிற்று. இதன் பிறகு அவர் டெலி பிராம்ப்டர் பயன்படுத்தியது தெரிய வந்தது.
கருவி செயல்படும் விதம்
இந்தக் கருவியை மோடி பயன்படுத்துவதை எளிதாகக் கண்டுபிடிக்காமல் இருக்க காரணம், அதன் அமைப்பு ஆகும். அதிலும், மோடி பயன்படுத்துவது சில மாதங்களுக்கு முன் தயாரித்து வெளியான அதிநவீன வகையாகும். இரு கண்ணாடி களால் இணைக்கப்பட்ட இந்தக் கருவியானது சுமார் ஒரு அடி உயரம் மற்றும் முக்கால் அடி அகலத்தில் அமைந்திருக்கும். அதை பேசும் மேடையில் நின்றால் தெளிவாக தெரியும்படி மிகவும் மெல்லிய உயரமான கம்பியில் பொருத்தி விடுகிறார்கள். பிறகு, எலக்ரானிக் கருவியான அதை கணினியுடன் இணைத்து 56 முதல் 72 அளவுகளிலான பதிவான எழுத்துருக்களில் ஓட விடுகிறார்கள். அதை மோடி நின்றபடி பார்த்து பேச, பேச எழுத்துகள் நகர்ந்தபடி இருக்கும். பார்ப்பவர்களுக்கு மோடி, தம் முன் அமர்ந்துள்ளவர்களை பார்த்து பேசுவது போல் இருக்கும். ஏனெனில். முன்புறம் இருந்து மேடையை பார்ப்பவர்களுக்கு டெலி பிராம்டரில் ஊடுருவியபடி மோடியின் முகம் தெரியும்.
வெளிநாட்டு தலைவர்கள்
1960-களில் அறிமுகப்படுத்தப் பட்ட இந்தக் கருவியை அமெரிக்கா உட்பட உலக நாடுகளின் அதிபர்கள் பலரும் பயன்படுத்துகிறார்கள். இந்தியாவில் இதை தொலைக் காட்சி செய்தி வாசிப்பாளர்கள் பரவலாகப் பயன்படுத்துகின்றனர்.
அமெரிக்க அதிபர் தேர்தலின் போது வேட்பாளரான பராக் ஒபாமா, டெலிபிராம்ப்டரின் உதவியால் பிரச்சாரம் செய்து இருக்கிறார். இதன்மூலம் நாட்டிற்காக செய்ய இருப்பதை மிகவும் துல்லியமாக எடுத்துரைத்து மக்களை மலைக்க வைத்தது மிகவும் பரபரப்பாக அப்போது பேசப்பட்டது.
இளைஞர்களுக்கு இணையாக மொபைல் மற்றும் சமூக வலைத் தளங்களை பயன் படுத்துவதில் மோடி காட்டும் ஆர்வம் அனை வரும் அறிந்தது தான். எனவே, ஒபாமா பாணியில் மோடியும் டெலி பிராம்ப்டர் கருவியை பயன்படுத்தத் தொடங்கி இருப்பதாகக் கருதப்படுகிறது. இந்தக் கருவியை பொது இடங்களில் எந்தவித தயக்கம் இன்றி பயன்படுத்திய முதல் இந்தியப் பிரதமராக மோடி கருதப்படுகிறார்