மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரண ஆராய்ச்சி, மேம்பாட்டு மையம் சென்னை ஐஐடி-இல் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.
மாற்றுத் திறனாளிகளுக்கு பயன்படக்கூடிய வகையில் நவீன சக்கர நாற்காலிகள், செயற்கை மூட்டுகள் என்பன உள்ளிட்ட பல்வே
று உபகரணங்கள் தரமானதாகவும், குறைந்த விலையில் கிடைக்கக் கூடிய வகையிலும் உருவாக்கும் நோக்கத்தோடு "இந்த டிடிகே ஆராய்ச்சி மேம்பாட்டு மையம்' தொடங்கப்பட்டுள்ளது. சென்னை ஐஐடி முன்னாள் மாணவரும், டிடிகே
நிறுவனங்கள் குழுமத் தலைவருமான ஜெகனாதனின் ரூ. 3.68 கோடி நிதி உதவியோடு உருவாக்கப்பட்டிருக்கும் இந்த மையத்தில் ஐஐடி இயந்திரவியல் துறை பல்வேறு ஆராய்ச்சிகளையும், உபகரண மேம்பாடுகளையும் மேற்கொள்ள உள்ளது.
இது குறித்து ஐஐடி பேராசிரியர்கள் கூறியது:
ஐஐடி இயந்திரவியல் துறை பேராசிரியர் சுஜாதா ஸ்ரீநிவாசனும், அவருடைய மாணவர்களும் மாற்றுத் திறனாளிகளுக்கானச் செயற்கை மூட்டு, கால், சக்கர நாற்காலிகள் ஆகியவற்றுக்கான மாதிரிகளை ஏற்கெனவே உருவாக்கியுள்ளனர்.
தற்போது இந்தப் புதிய ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டிருப்பது, மேலும் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும், மாற்றுத் திறனாளிகளுக்கான நவீன உபகரணங்களைக் குறைந்த விலையில் உருவாக்குவதற்கான வாய்ப்பாகவும் அமையும்.
பல்வேறு மருத்துவமனைகள், தன்னார்வ அமைப்புகள், மருத்துவ நிபுணர்கள் ஆகியோருடன் இணைந்து மாற்றுத் திறனாளிகளுக்கான தேவை அறிந்து அதற்கேற்ற ஆராய்ச்சிகளும், மேம்பாட்டுப் பணிகளும் இந்த மையத்தில் மேற்கொள்ளப்படும் என்றனர்.