கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் இலவச பொறியியல் பட்டப் படிப்பு: வேந்தர் தகவல்
விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் 2015-16-ம் ஆண்டு பொறியியல் பட்டப் படிப்பில் சேருவதற்கான ஒருங்கினைந்த நுழைவுத் தேர்வில் முதல் 25 ஆயிரம்
தரத்திற்குள் வரும் மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கப்படும் என்று வேந்தர் க.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் வேந்தர் க.ஸ்ரீதரன் கூறியதாவது:
2015-16-ம் ஆண்டிற்கான முதலாண்டு பொறியியல் பட்டப் படிப்பிற்காக ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள ஒருங்கிணந்த நுழைவுத் தேர்விற்கான மாதிரித் தேர்வு கலசலிங்கம் பல்கலைக்கழகம், திருச்சி மற்றும் தேனியில் நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவ மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டப் படிப்பில் சேருவதற்கு ஏப்ரல் 2015-ல் நடைபெறவுள்ள ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில், அகில இந்திய அளவில் முதல் 25 ஆயிரம் இடங்களைப் பெறும் மாணவ மாணவியருக்கு முதலாண்டு பி.டெக். படிப்பிற்கு கட்டணம் கிடையாது. மேலும் விடுதிக் கட்டணம் மற்றும் பிற கட்டணங்களும் கிடையாது. முழு இலவசக் கல்வி வழங்கப்படும்.25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் தரத்திற்குள் வரும் மாணவ மாணவியருக்கு முதலாண்டு பொறியியல் பட்டப் படிப்பில் கல்விக் கட்டணம் மட்டும் கிடையாது.
இந்த சலுகைகளைப் பெற்றுப் பொறியியல் படிப்பில் படிக்கும் மாணவர்கள், அவர்களுடைய கல்வியில் நல்ல தரத்தினை தொடர்ந்து பின்வரும் ஆண்டுகளில் பெற்றால், அடுத்தடுத்த ஆண்டுகளுக்கான கல்விக் கட்டணமும் கிடையாது.
ஏழை மாணவர்கள் உயர் கல்வியை தடையின்றி பெற்று நாட்டிற்கும், சமுதாயத்திற்கும் தொண்டாற்ற வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் இந்த சலுகைகள் வழங்கப்படுகிறது என்றார் அவர்.
மேலும் விவரங்களுக்கு 98843-77269, 95008-06564 என்ற கைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.