ஓலைச்சுவடிகளில் இருந்த திருக்குறளின் பரிமேலழகர் உரை, தொல்காப்பியத்தின் நச்சினியார்க்கினியார் உரை ஆகியவை உள்பட மொத்தம் 2400 ஓலைச்சாவடிகளில் இருந்த அனைத்தும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தொல்லியல்துறை கட்டுப்பாட்டின் கீழ் சென்னை பல்கலை
க்கழக வளாகத்தில் அரசினர் கீழ்த்திசை சுவடிகள் நூலகம் மற்றும் ஆய்வு மையம் இயங்கி வருகிறது. இந்த நூலகத்தில் இருந்த பழமை வாய்ந்த ஓலைச்சுவடிகள் மிகவும் பாதுகாக்கும் நிலையில் இருந்தன. எனவே அவற்றை பாதுகாக்க தமிழக அரசு முடிவு செய்தது.
மொத்தம் 72 ஆயிரத்து 748 ஓலைச்சுவடிகள் உள்ளன. அவற்றில் முதல் கட்டமாக 2400 ஓலைச்சுவடி கட்டுகளில் இருந்த திருக்குறள் உரை, தொல்காப்பியம் உரை உள்ளிட்டவை கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு அவை இணையதளத்தில் வெளியிடும் விழா நேற்று சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் நடைபெற்றது.
பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் கே.சி.வீரமணி கலந்துகொண்டு ஓலைச்சுவடிகளில் உள்ளவற்றை கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு இணையதளத்தில் வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையத்துறை அரசு கூடுதல் செயலாளர் ரா.கண்ணன், தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் தா.கி.ராமச்சந்திரன் உள்பட பலர் பேசினார்கள்.விழா ஏற்பாடுகளை துணை கண்காணிப்பாளர் வசந்தி உடன் இருந்து கவனித்தார்.
தொடக்கத்தில் தொல்லியல்துறை ஆணையர் தா.கார்த்திகேயன் வரவேற்றார். இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ப.தனபால் நன்றி கூறினார்.
விழாவையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியக வளாகத்தில் பழமை வாய்ந்த ஓலைச்சுவடிகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக பரிமேலழகர் எழுதிய திருக்குறள் உரை, நச்சினியார்க்கினியர் எழுதிய தொல்காப்பியம் உரை , பெரிய புராணம், ஐம்பெரும்காப்பியங்களுள் ஒன்றான சீவகசிந்தாமணி, நாலடியார், ஆகியவை ஓலைச்சுவடிகளில் இருந்தன. சிவலிங்க வடிவில் திருவாசகம் ஓலைச்சுவடியில் இருந்தது. அதை கல்லூரி மாணவிகள், பெண்கள், ஆண்கள் ஆர்வத்துடன் பார்த்தனர்.
அந்த ஓலைச்சுவடிகளில் உள்ள எழுத்துக்கள் அழகாகவும் நேர்த்தியாகவும் அதே நேரத்தில் அடித்தல் திருத்தல் இல்லாமலும் இருந்தன.
பைபிள் தாளில் எழுதப்பட்டு இருந்தது. இப்படி தாளில் எழுதப்பட்டவைகளும், ஓலைச்சுவடிகளில் உள்ளவற்றையும் இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது.