புதுடில்லி:'தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விவரங்களை பெற, தற்போது செலுத்தப்படும் கட்டணத்திற்கு பதிலாக தபால் தலைகளை பயன்படுத்தலாம்' என, மத்திய தகவல் ஆணையம், மத்திய அரசுக்கு பரிந்துரை
செய்துள்ளது.
பொதுமக்கள் தாங்கள் அறிய விரும்பும் தகவல்களை பெற, ஆர்.டி.ஐ., எனப்படும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். உரிய காரணங்களுக்காக கோரப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, விண்ணப்பதாரர் களுக்கு தேவையான தகவல்கள் அனுப்பி வைக்கப்படும். இதை, மத்திய தகவல் ஆணையம் கண்காணிக்கிறது.
ஆர்.டி.ஐ., மூலம் விண்ணப்பிக்க, தற்போதைய நடைமுறையின் படி, 10 ரூபாய்க்கான காசோலையை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும் அல்லது பணமாகவும் செலுத்தலாம். ஆனால், ராணுவம் உள்ளிட்ட சில துறைகள், காசோலைகளையோ, நேரடியாகவோ பணத்தை பெறுவதில்லை. எனவே, விண்ணப்பதாரர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.இந்த நடைமுறை சிக்கலை போக்கவும், ஆர்.டி.ஐ., மூலம் விண்ணப்பிப்பதை எளிதாக்கவும், மத்திய தகவல் ஆணையம் சில பரிந்துரைகளை மத்திய அரசிடம் முன்வைத்துள்ளது.
இதன்படி, ஆர்.டி.ஐ., விண்ணப்பதாரர்கள், விண்ணப்ப கட்டணத்திற்கு பதிலாக, தபால் தலைகளை பயன்படுத்த அனுமதித்தால், பொதுமக்களின் சிரமத்தை குறைக்கலாம் என கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் விண்ணப்ப கட்டணமாக, கோர்ட் ஸ்டாம்ப்களை பயன்படுத்தும் முறை அமலில் இருப்பதாகவும், மத்திய தகவல் ஆணையம் தெரிவித்துஉள்ளது. மத்திய அரசு, இந்த பரிந்துரையை ஏற்கும் பட்சத்தில், ஆர்.டி.ஐ., விண்ணப்பதாரர்கள் தபால் தலைகளை விண்ணப்ப கட்டணமாக செலுத்தினால் போதுமானது.