'போக்குவரத்து கழகங்களில், ஓட்டுனர், நடத்துனர் பணியிடங்களுக்கு, எழுத்து தேர்வு மூலம், தேர்வு செய்ய வேண்டும்' என, சென்னை உயர்
நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
20 ஆண்டுகள்:
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த, கோவைசாமி என்பவர், தாக்கல் செய்த மனு: வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்து, 20 ஆண்டுகள் ஆகியும், வேலை கிடைக்கவில்லை. எனக்கு வயது, 44. போக்குவரத்து கழகத்தில், பணி கிடைக்க, என் பெயரை பரிந்துரை செய்யும்படி, சென்னையில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்துக்கு, உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை பரிசீலித்த பின், நீதிபதி அரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவு: போக்குவரத்து கழகங்களில் நடக்கும் தேர்வுகள், நேர்முகத் தேர்வின் அடிப்படையில் மட்டுமே நடப்பதால், அதுகுறித்து பொதுமக்களின் மனதில் சந்தேகம் எழுந்துள்ளது. நேர்முகத் தேர்வின் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்வது, அரசியலமைப்பு சட்டத்தை மீறுவதாகும். ஓட்டுனர்கள், நடத்துனர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், இளநிலை உதவியாளர்கள் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு, உண்மையானதாக இல்லை. ஒரு சில நிமிடங்களில், நேர்முகத் தேர்வு முடிந்து விடுகிறது. பணியிடங்களுக்கான நியமனங்கள், பணி விதிகளின்படி, இடஒதுக்கீட்டு அடிப்படையில் இருக்க வேண்டும். எனவே, தொழில்நுட்பம், டிராபிக், நிர்வாக துறைகளில், குரூப் - சி பணியிடங்களுக்கு, கீழ்கண்ட முறையில் தேர்வு செய்ய வேண்டும்.
* வேலைவாய்ப்பகம் மட்டும் அல்லாமல், வெளிச்சந்தை மூலமாகவும், விண்ணப்பங்களை வரவேற்று, நிரப்ப வேண்டும்.
* சில பணியிடங்களுக்கு, பணி விதிகளின்படி, கல்வித் தகுதியாக, 10ம் வகுப்பு அல்லது பிளஸ் 2 என, நிர்ணயிக்கப்பட்டிருந்தால், படிப்பில் பெற்ற மதிப்பெண்களுக்கு, 'வெயிட்டேஜ்' அளிக்க வேண்டும் அல்லது எழுத்து தேர்வு நடத்த வேண்டும்.
* 10ம் வகுப்புக்கு குறைவான கல்வி தகுதி அல்லது பட்டப் படிப்பு என, நிர்ணயிக்கப்பட்டிருந்தால், அந்த கல்வித் தகுதிக்கு இணையாக, எழுத்து தேர்வு மூலம் மட்டுமே, தேர்வு செய்ய வேண்டும்.
தேர்வு ஏஜன்சி:
இந்த உத்தரவு, அனைத்து போக்குவரத்து கழகங்களுக்கும் பொருந்தும். தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் மூலமாகவோ அல்லது போக்குவரத்து கழகங்கள் சேர்ந்து, மத்திய தேர்வு ஏஜன்சியை ஏற்படுத்தி, அதன் மூலமாகவோ, எழுத்து தேர்வு நடத்தி, தேர்வு செய்யலாம். இந்த வழக்கைப் பொறுத்தவரை, மனுதாரரின் வயதை கருத்தில் கொள்ளாமல், அடுத்தகட்ட தேர்வின் போது, சந்தர்ப்பம் வழங்க வேண்டும். இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.