லாலபேட்டை அடுத்துள்ள சிந்தலவாடி பஞ்., சந்தைப்பேட்டை அருகில் அரசு நடுநிலைப் பள்ளியில் படிக்கும் ஆறாம் வகுப்பு மாணவன், மீது சக மாணவர்களை அடிக்கச் சொல்லி வேடிக்கை பார்த்த ஆசிரியர் மீது
, போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் யூனியன் சிந்தலவாடி பஞ்சாயத்துக்குட்பட்ட சந்தைப்பேட்டையில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுற்றுப்பகுதியிலுள்ள, 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளியில் மயில்பட்டியைச் சேர்ந்த துரைராஜ் மகன் ராஜ்குமார், 11, என்ற மாணவன் ஆறாம் வகுப்பு தமிழ் வழிக் கல்வி படித்து வருகிறான். நேற்று முன்தினம் காலை 11.30 மணிக்கு, ஆங்கில பாடம் நடந்து கொண்டிருந்த போது, ஆங்கில ஆசிரியர் மதிவாணன் பாடம் எடுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது, ஆங்கில செயல் விளக்க பதிவேட்டை மாணவன் ராஜ்குமார் காட்டியுள்ளான். அதற்கு ஆசிரியர், ""நோட்டை மூடி வை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்,'' என்று கூறியுள்ளார். சிறிது நேரம் கழித்து மாணவன் மீண்டும் வற்புறுத்தியதால், நோட்டை வாங்கி, ஆசிரியர் மதிவாணன் பார்த்துள்ளார்.
மற்ற மாணவர்களை பார்த்து, யார், யார் நோட்டு கொண்டு வந்திருக்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு மற்ற மாணவர்கள் நோட்டு கொண்டு வரவில்லை என்று கூறியதால், மற்ற மாணவர்களை வைத்து, ராஜ்குமாரை அடிக்க விட்டு ஆசிரியர் மதிவாணன் வேடிக்கை பார்த்துள்ளார். பள்ளி முடிந்ததும் மாலை 5.30 மணிக்கு வீட்டுக்கு சென்ற மாணவன், தனது தாயிடம் நடந்த சம்பவத்தை கூறி அழுதுள்ளான். உடனடியாக, 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான்.
இச்சம்பவம் அப்பகுதியில் பரவியதால், லாலாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், சிகிச்சை பெற்று வரும் மாணவனிடம் நேரில் விசாரணை நடத்தி விபரங்களை கேட்டறிந்தார். பள்ளி ஆசிரியர் மதிவாணன் செயல் குறித்து, தலைமையாசிரியர் புவனேஸ்வரியிடம் போலீஸார் விளக்கம் கேட்டபோது, "எனக்கு எதுவும் தெரியாது. மற்றவர்கள் சொல்லித்தான் தகவல் தெரியவந்தது,'' என்றார். போலீஸார் விசாரணைக்காக மொபைல் ஃபோனில் ஆசிரியர் மதிவாணனை தொடர்பு கொண்டனர். ஆனால், அவர் மொபைல் ஃபோன் சுவிட்ச் ஆஃப் என்று வந்தது. லாலாபேட்டை போலீஸார், ஆசிரியர் மதிவாணன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று காலை 10.30 மணியளவில் கிருஷ்ணராயபுரம் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் வளர்மதி, கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் செல்வி, மாவட்ட கல்வி அலுவலர் (பொ) செல்வராஜ் ஆகியோர் பள்ளிக்கு நேரில் சென்று மாணவர்களிடம் தனித்தனியாக வெள்ளை பேப்பர் கொடுத்து என்ன நடந்தது? என்பதை எழுதி வாங்கிக் கொண்டு சென்றனர். இதுகுறித்து கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி கூறுகையில், ""புகாருக்கு ஆளான பள்ளியில் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்து விசாரித்துள்ளனர். அறிக்கை வந்த பின் சம்பவம் நடந்தது உண்மை என்றால், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.