திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர், நூலகர் பட்டம் பெற்றவர்கள் திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலேயே பதிவு செய்துகொள்ளலாம்.
இதுதொடர்பாக, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் முகமதுசித்திக்
வெளியிட்ட செய்திக் குறிப்பு: உடற்கல்வி ஆசிரியர் நூலகர் பாடப்பிரிவுகளில் பட்டம் பெற்றவர்களது பதிவுகள் பெருநகரங்களில் மட்டுமே பதிவு செய்யப்பட்டு வந்த நிலையை மாற்றம் செய்து, அந்தந்த மாவட்ட அலுவலகங்களிலேயே பதிவு செய்யவும், பராமரிக்கவும் வேலைவாய்ப்புத்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
எனவே, இத்தகைய சான்றுகளை ஏற்கெனவே தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருந்தால் அவற்றை திருநெல்வேலி மாவட்ட அலுவலகத்தில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இதன்படி, பலரது பதிவுகளும் திருநெல்வேலி அலுவலகத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை பதிவு செய்யாத நபர்கள் இருந்தால் உடனடியாக திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ, அஞ்சல் வழியிலோ விண்ணப்பித்து பதிவு செய்யலாம்.
விண்ணப்பத்துடன் கல்விச் சான்று, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டை மற்றும் மதுரை தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டை நகலுடன் வரும் 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என முகமதுசித்திக் தெரிவித்துள்ளார்.