தமிழக பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு பாலியல் கல்வியை பாடமாகசேர்ப்பது தொடர்பாக எட்டு வாரத்திற்குள் பரீசிலிக்க வேண்டும் என்றுதமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் சித்ராதேவி சென்னை ஐகோர்ட்டில்
தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது:
அண்மைகாலங்களில் பெண் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் கொடுமைகள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பாலியல் கொடுமைகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தவும், பாலியல் தொந்தரவுகள் குறித்து பள்ளியில் பாடமாக கற்பிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலியல் விழிப்புணர்வு குறித்த பாடத் திட்டத்தை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும். பாலியல் கொடுமை குறித்து விழிப்புணர்வு முகாமை பெற்றோர்கள் மத்தியில் ஆசிரியர்கள் நடத்த வேண்டும். இதற்காக பெற்றோர்கள், ஆசிரியர் மற்றும் மாணவிகள் குழுவை அமைக்க வேண்டும்.பாலியல் கல்வியை பாடபுத்தகத்தில் கொண்டு வந்தால் பயனுள்ளதாக இருக்கும் என்று அரசு மற்றும் பள்ளி கல்வித்துறை செயலாளருக்கு அக்.1ம் தேதி மனு கொடுத்தேன்.
இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, உடனடியாக இதை தடுத்து நிறுத்த உயர்நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கைநீதிபதிகள் சத்தியநாராயணன், மகாதேவன் ஆகியோர் இன்று விசாரித்தனர். மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் சூரியபிரகாசம் ஆஜரானார். அரசு சார்பாக வழக்கறிஞர் மூர்த்தி ஆஜராகி, மனுவை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள ஆட்சேபம் இல்லை என்றார். இதை நீதிபதிகள் ஏற்று கொண்டு, மனுதாரரின் கோரிக்கை குறித்து எட்டு வாரத்திற்குள் பரீசிலித்து முடிவெடுக்குமாறு அரசு பள்ளிக்கல்வித்துறை செயலாளருக்கு உத்தரவிட்டனர்.