பெண் குழந்தைகளுக்கு பாலியல் கொடுமைகள் குறித்து, பாடப் புத்தகம் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்த பரிசீலனை செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை சூளையைச் சேர்ந்த வழக்குரைஞர் டி.சித்ராதேவி உயர்
நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவின் விவரம்:
இளம் மாணவர்கள், குறிப்பாக பெண் குழந்தைகள் தினந்தோறும், வீடுகள், பள்ளிகள், தெருக்கள் ஆகிய இடங்களில் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகின்றனர்.
மத்திய அரசு கடந்த 2007-ஆம் ஆண்டு நாடு முழுவதும் நடத்திய குழந்தைகள் துன்புறுத்தல் தொடர்பான ஆய்வில், 53 சதவீத குழந்தைகள் வீடுகள், பள்ளிகள், இதர இடங்களில் பாலியல் தொந்தரவுக்கு ஆளாவதாகத் தெரிவித்து. இதில், அதிகமாக வீடுகள், பள்ளிகளில்தான் நடைபெறுவதாகக் குறிப்பிடப்பட்டது.
பாலியல் கொடுமையில் இருந்து பெண் குழந்தைகளை பாதுகாப்பதற்கு, அவர்களின் பாடப்புத்தகத்தில், சந்தேகத்துக்குறிய நடத்தை குறித்து படமாகவும், கேலிச் சித்திரம் வாயிலாகவும் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் என குழந்தைகள் பாதுகாப்பு நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அளித்தேன். அதில், இந்த மாதம் 19-ஆம் தேதி குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகள் எதிர்ப்பு தினம் கொண்டாடும் போது, பாலியல் கல்வி குறித்த விழிப்புணர்வுக்கு முக்கியத்துவம் அளிக்குமாறு தெரிவித்தேன். ஆனால், எனது மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, பெண் குழந்தைகளை பாலியல் கொடுமைகளிலிருந்து தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் மனுதாரர் அளித்த கோரிக்கை மனுவை 8 வாரங்களுக்குள் பரிசீலனை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.