புதுடில்லி: பல்கலைகளில், விருப்ப அடிப்படை மதிப்பீட்டு திட்டத்திற்கான, புதிய விதிமுறைகளை, பல்கலை மானியக் குழு - யு.ஜி.சி., வகுத்துள்ளது.
இதுகுறித்து, பல்கலைகளுக்கு, யு.ஜி.சி., செயலர் ஜஸ்பால் சாந்து எழுதியுள்ள
கடிதம்: பல்கலைகள், தங்களுக்கு என தனியான மதிப்பீட்டு முறையை பின்பற்றுகின்றன. இதனால், மாணவர்கள் பிற பல்கலைகளுக்கு உயர்கல்விக்கு செல்லும்போதும், பணி வாய்ப்பு பெறும்போதும் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த பிரச்னையை போக்க, விருப்ப அடிப்படை மதிப்பீட்டு திட்டம் - சி.பி.சி.எஸ்., என்ற திட்டத்தை யு.ஜி.சி., கொண்டு வந்து, அதை பல்கலைகள் ஏற்றுக் கொண்டுள்ளன. அதேநேரம், ஒரு பல்கலையில் இருந்து மற்றொரு பல்கலைக்கு மாறும் மாணவர்களுக்கு, சில நேரங்களில் பிரச்னை ஏற்படுகிறது.
எனவே, சி.பி.சி.எஸ்., திட்டத்திற்கு, பொதுவான விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இவற்றை, பல்கலைகள் பின்பற்ற வேண்டும். இந்த திட்டத்தை, 2015 - 16 கல்வி ஆண்டு முதல், செயல்படுத்த வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.