Skip to main content

அடுத்த ஆண்டு தாக்கல் ஆகும் பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு வரம்பு உயர்த்தப்படுமா?

அடுத்த ஆண்டு தாக்கல் ஆகும் பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு வரம்பு உயர்த்தப்படுமா? என்பது குறித்து மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி விளக்கம் அளித்தார்.

அருண் ஜெட்லி டெல்லியில் நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர்
கூறியதாவது:-

வருமான வரி

மத்திய அரசின் முழு அளவிலான பட்ஜெட்டை வருகிற பிப்ரவரி மாதம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய இருக்கிறேன். கடந்த பட்ஜெட்டில் வரி விலக்குக்கான வருமான உச்சவரம்பை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.2¼ லட்சமாக உயர்த்தினேன். போதிய நிதி ஆதாரங்கள் இருந்திருந்தால் இந்த வரம்பை மேலும் உயர்த்தி இருப்பேன்.

தற்போது மாதம் ரூ.35 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை சம்பளம் பெறுவோர் சிறிதளவு பணத்தை சேமித்தால், வருமான வரி செலுத்த வேண்டியது இருக்காது.

ஆனால் விலைவாசி, போக்குவரத்து செலவு, குழந்தைகளுக்கான படிப்பு செலவு ஆகியவற்றையெல்லாம் வைத்துப் பார்த்தால், இந்த வருவாய் உள்ளவர்கள் சேமிப்பது என்பது இயலாத காரியம்தான்.

கூடுதல் சுமை கிடையாது

மாத சம்பளம் பெறுவோர் மற்றும் நடுத்தர மக்கள் மீது கூடுதல் வரிச்சுமையை சுமத்த விரும்பவில்லை. அதேசமயம் வரிஏய்ப்பு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

வருமான வரி விலக்கு வரம்பை உயர்த்தினால் வரி செலுத்துவோரிடம் அதிக பணம் இருக்கும். இதனால் அவர்கள் அதிகம் செலவிடுவார்கள். அப்போது அரசுக்கு மறைமுக வரி வசூல் அதிகமாகும்.

அரசுக்கு கிடைக்கும் வருவாயில் கிட்டத்தட்ட பாதி அளவு உற்பத்தி வரி, கலால் வரி, சேவை வரி போன்ற மறைமுக வரிகள் மூலம்தான் கிடைக்கிறது. எல்லோருமே மறைமுக வரி செலுத்துகிறார்கள். எனவே வரி விதிப்பு இனங்களை அதிகரிப்பதன் மூலம் வரி வருவாயை பெருக்க முடியும்.

கருப்பு பணம்

வரிஏய்ப்பு செய்வதற்காக ஒரு நாட்டில் உள்ளவர்கள் மற்றொரு நாட்டுக்கு தங்கள் பணத்தை கொண்டு பதுக்குகிறார்கள். இப்படி சட்ட விரோதமாக வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பணத்தை மீட்டு தங்கள் நாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்பதில் எல்லா நாடுகளுமே ஒருமித்த கருத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட தொடங்கி உள்ளன.

வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணம் பற்றிய தகவல்களை சம்பந்தப்பட்ட நாட்டுக்கு ஆதாரங்களுடன் தெரிவித்து சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் மூலம்தான் அதை மீட்டுக் கொண்டுவர முடியும். இதில் குறுக்கு வழி எதுவும் கிடையாது.

வரி ஒப்பந்தங்கள்

வரி ஒப்பந்தங்கள் காரணமாக வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணம் பதுக்கி வைத்து இருப்பவர்களை பற்றிய தகவல்களை பெறுவது அரசுக்கு கடினமாக உள்ளது. எனவே வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள பணத்தை மீட்டு கொண்டு வருவதில் உள்ள தடைகளை நீக்குவதற்கு வசதியாக அந்த நாடுகளுடன் செய்து கொண்ட வரி ஒப்பந்தங்களை மத்திய அரசு மறுஆய்வு செய்ய இருக்கிறது.

கருப்பு பண விவகாரம் தொடர்பாக சமீபத்தில் பிரதிநிதிகள் குழு ஒன்றை சுவிட்சர்லாந்து நாட்டுக்கு அனுப்பி இருந்தோம். சில சாதகமான தகவல்களுடன் அந்த குழுவினர் அங்கிருந்து திரும்பி இருக்கிறார்கள்.

மசோதாக்கள்

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் காப்பீடு மசோதா போன்ற சில சீர்திருத்த நடவடிக்கைகள் தொடர்பான மசோதாக்களை நிறைவேற்றுவதில் அரசு உறுதியாக இருக்கிறது. இடையூறுகள் ஏற்படுத்துவதன் மூலம் இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்படுவதை தடுத்து நிறுத்த முடியாது.

இவ்வாறு அருண் ஜெட்லி கூறினார்.

கிசான் விகாஸ் பத்திரம் சேமிப்பு திட்டத்தை மத்திய அரசு மீண்டும் தொடங்கி இருப்பதை குறை கூறியுள்ள காங்கிரஸ், போதை மருந்து கடத்தல் போன்ற சட்ட விரோத வழிகளில் வரும் பணத்தை சிலர் இதில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறி இருப்பது பற்றி அவரிடம் கேட்கப்பட்டது.

அதற்கு அவர் பதில் அளிக்கையில், இந்த சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்வது தொடர்பாக சில பாதுகாப்பு அம்சங்கள் ஏற்படுத்தப்பட்டு இருப்பதாகவும், ரூ.50 ஆயிரத்துக்கு மேல் மதிப்புள்ள கிசான் விகாஸ் பத்திரம் வாங்கினால் வருமான வரி கணக்கு எண்ணை (‘பான்’) கொடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

முன்னுதாரணமாக விளங்கும் வடமணப்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளி

எண்ம முறையில் பாடம் கற்றல், குழந்தைகள் நூல்கள் வாசித்தல், கணினிபயிற்சி பெறுதல், அறிவியல் ஆய்வகம் என பல சிறப்பு அம்சங்களுடன் சுகாதாரம், ஒழுக்கம் ஆகியவற்றுடன் சேர்ந்து கல்வி கற்பிக்கப்படுகிறது.