இந்தியாவில் அனைத்து வித ஆபாச இணையதளங்களுக்கும் தடை விதிக்க செய்ய மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இவற்றை யாரும் பார்க்காமல் தடுக்கும்படியான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அனைத்து இன்டர்நெட்
சேவை நிறுவனங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சமீபகாலமாக இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து காணப்படுவதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் சர்வதேச அளவில் இந்தியா பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நாடு என்ற பிம்பம் உருவாகி வருகிறது. எனவே, இந்தியாவில் பெண்களின் பாதுகாப்பை அதிகரிக்க மத்திய அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருகட்டமாக இணைய தளங்களில் ஆபாச வலைதளங்களை தடை செய்ய முடிவு செய்துள்ளது.
இத்திட்டத்தினை மத்திய அரசு மூன்று கட்டங்களாக பிரித்து செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி, முதலாவதாக இந்தியாவில் புழக்கத்தில் உள்ள ஆபாச இணையதளங்கள் குறித்து கணக்கெடுப்பது. பின்னர், ஐஎஸ்பிக்கள் மூலம் மொத்தமாகத் தடை செய்வது. இவ்வாறு மொத்தமாக முடக்கம் செய்யும் போது அவை எதிர்காலத்தில் இணைய வேகத்தை குறைக்க வாய்ப்புள்ளதா என்பதை ஆராய்வது ஆகும். சில நாடுகளில் ஆபாசப் படம் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்றாலும் கூட, இந்திய கலாச்சாரத்திற்கு இது ஏற்புடையதா, சமூகத்திற்கு நன்மை பயப்பதா என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என ரவிசங்கர் கூறியுள்ளார்.
கடந்த ஜூன் மாதம் இண்டர்நெட் புரொவைடர்கள் அசோசியேசன் ஆப் இந்தியா, மத்திய அரசின் அதிகாரப்பூர்வ உத்தரவு மற்றும் ஆதரவு இல்லாமல் இந்தியாவில் ஆபாச இணையதளங்களை தடை செய்வது சாத்தியமில்லை என உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. எனவே, இது தொடர்பாக பதிலளிக்கும்படி நீதிமன்றம் தொலைத் தொடர்புத் துறைக்கு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தியாவில் பிஎஸ்என்எல், டாட்டா கம்யூனிகேஷன்ஸ், டாடா டெலிசர்வீசஸ், பார்தி ஏர்டெல்,- எம்டிஎன்எல்,ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்,சிஃபி பிராட்பேண்ட், ஏசியாநெட் ஆகிய நிறுவனங்கள் இணையதள சேவையை வழங்கி வருகிறது.