பிளஸ் 2 தேர்வில் இந்த ஆண்டு 95 சதவீத தேர்ச்சி வீதத்தை எட்ட இலக்குநிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று பள்ளிக் கல்வித்துறை செயலாளர்சபீதா தெரிவித்தார். சென்னை சாந்தோம் பள்ளியில் குழந்தைகள் தினம், டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் விருது வழங்கும் விழா ஆகியவை
நடந்தன. விழாவில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
பள்ளிக் கல்வி அமைச் சர் வீரமணி, பள்ளிக் கல்வித்துறை செயலாளர்கள் முக்கிய விருந்தினராக பங்கேற்று, போட்டிகளில் பரிசு பெற்ற 53 மாணவ, மாணவியருக்கு பரிசுகளை வழங்கினர். எஸ்.ஆர்.அரங்கநாதன் விருது 48 பேருக்கும், திறமையான நூலகர்கள் 24 பேருக்கு பரிசுகளும் வழங்கினர்.
இதையடுத்து பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா பேசியதாவது: மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் வகையில் பள்ளிக் கல்வித்துறை, தொடக்க கல்வித்துறையில், கடந்த மூன்றரை ஆண்டுகளில் 72 ஆயிரத்து 557 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், 182 புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. 760 நடுநிலைப் பள்ளி கள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. 400 உயர்நிலைப் பள்ளிகள் மேனிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்ட அம்சங்களின் அடிப்படையில் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் உள்பட தனியார் பள்ளிகளில் நலிந்தோருக்கான25 சதவீத இட ஒதுக்கீட்டில் இதுவரை 1 லட்சத்து 39 ஆயிரத்து 805 குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் மாணவ மாணவியரின் தேர்ச்சி வீதம் 95 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதை நிறைவேற்றும்வகையில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு செயலாளர்சபீதா தெரிவித்தார்.
செஸ் விளையாட்டுக்கு ரூ.10 கோடி செலவிட்டும் அரசு பள்ளி அவுட் :
குழந்தைகள் தின விழாவில் மாணவ மாணவியருக்கு பரிசளித்து பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பேசும்போது பள்ளிகளில் சதுரங்க விளையாட்டு போட்டி நடத்தி முடித்து அதில் வெற்றி பெற்ற 24 மாணவ மாணவிருக்கு பரிசுகள் வழங்குவதாக பெருமையுடன் கூறிக்கொண்டார். மாணவர்களின் திறமையை வளர்க்க பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்த இந்த ஆண்டுக்காக அரசு ரூ. 10 கோடி நிதி ஒதுக்கியது. கடந்த ஆண்டு 11 லட்சம் மாணவர்கள் சதுரங்க போட்டியில் கலந்து கொண்டு மாநில அளவில் 24 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்த ஆண்டு 15 லட்சம் மாணவ மாணவியர் கலந்து கொண்டதில் 24 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இந்த போட்டிகளை நடத்த அரசு ஒதுக்கிய நிதி ரூ.10 கோடி செலவிடப்பட்டுள்ளது. ஆனால், வெற்றி பெற்ற 24 பேரில் ஒரே ஒருவர் தான் அரசுப் பள்ளியை சேர்ந்த மாணவி வருஷா என்பவர் குன்றத்தூர் பெண்கள் மேனிலைப் பள்ளி மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மற்ற 23 பேர் தனியார் பள்ளி மாணவ மாணவியர் என்பது குறிப்பிடத்தக்கது. ரூ. 10 கோடி செலவு செய்தும் அரசுப் பள்ளி மாணவ மாணவியர் சதுரங்க போட்டியில் வெற்றி முடியாத நிலை தொடர்வது வேதனைக்குரியது.