மதிப்பெண் பட்டியல் திருத்துவதற்கு தபால் மூலம் கடிதம் அனுப்ப கூடாது அரசு தேர்வுகள் இயக்குநர் உத்தரவு:
மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளில் பயின்ற மாணவர்களிடம் இருந்து மேல்நிலை, இடைநிலை தேர்வுகளுக்கான மதிப்பெண் சான்றிதழ்களில் திருத்தம் கோருதல், சான்றிதழ்களை தொலைத்துவிட்டு
இரண்டாம்படி மதிப்பெண் சான்றிதழ் கோரி விண்ணப்பங்கள் மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் சமர்ப்பிப்பது உண்டு. இதுதொடர்பான விண்ணப்பங்களை அரசு தேர்வுகள் இயக்குநரக அதிகாரிகளுக்கு தபாலில் அனுப்பி வைக்கும் வழக்கம் இருந்து வருகிறது.
இந்தநிலையில் இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து நிலுவை விபரங்களை பெறும் வகையில் மண்டல துணை இயக்குநர்கள் ஒவ்வொரு மாதமும் 2ம் வெள்ளியன்று தங்களது மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களின் நேர்முக உதவியாளர்கள் மற்றும் தேர்வு பணியாளர்களுடன் கூட்டம் நடத்தி அறிக்கை அனுப்ப வேண்டும் என்று அரசு தேர்வுகள் இயக்குநர் அனைத்து மண்டல துணை இயக்குநர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பான உத்தரவு விவரம்:
மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களின் நேர்முக உதவியாளர்கள் மதிப்பெண் சான்றிதழ் திருத்தம், 2ம் படி கோருதல் தொடர்பாக மண்டல துணை இயக்குநர் அளவில் நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும். கூட்டம் நடத்தப்படுவதற்கு ஓரிரு நாட்கள் முன்பே மதிப்பெண் சான்றிதழ்களில் திருத்தம் கோருதல், 2ம் படி மதிப்பெண் சான்றிதழ் கோருதல், மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மை தன்மை அறிதல் போன்ற விண்ணப்பங்களை பள்ளி தலைமை ஆசிரியர்கள் தொகுத்து சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர்களின் நேர்முக உதவி அலுவலர்கள், தேர்வு பணியாளர்களிடம் வழங்கிட வேண்டும்.
மதிப்பெண் சான்றிதழ் உண்மை தன்மை கோரி பெறப்படும் விண்ணப்பங்களை அனைத்து உதவி தொடக்க கல்வி அலுவலர்களும் தொகுத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலரின் நேர்முக உதவி அலுவலரிடம் வழங்க வேண்டும். வரும் காலங்களில் எக்காரணம் கொண்டும் உண்மை தன்மை அறிதல் சார்ந்த கடிதங்களை தபால் வழியாக அனுப்ப கூடாது. அவ்வாறு தபால் மூலம் பெறப்படும் கடிதங்கள் நிராகரிக்கப்படும்.
இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.