'எல்லா வாக்காளர்களுக்கும் வண்ண அடையாள அட்டை வழங்கப்படுமா' என்ற அரசியல் கட்சிகளின் கேள்விக்கு, தேர்தல் அதிகாரி பதிலளித்தார். மதுரையில் வாக்காளர் பட்டியல் தொடர்பாக, தேர்தல் பார்வையாளர் வெங்கடேசன் தலைமையில், சர்வ கட்சி நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை
கூட்டம் நடந்தது.
தி.மு.க., நிர்வாகிகள் போஸ், ஜவகர், காங்., மாவட்ட தலைவர்கள் சேதுராமன், விஜயபாஸ்கர் மற்றும் தே.மு.தி.க., கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் பலர் பங்கேற்றனர். தி.மு.க.,வினர் கூறுகையில், ''வாக்காளர் பட்டியலில் ஒருவரது பெயர் இரு இடங்களில் பதிவாகிறது' என்றனர். இதற்கு பதிலளித்த அதிகாரி, 'இதனை உள்ளூர் அதிகாரிகள் சரிசெய்வர். வாக்காளர் சேர்க்கை, நீக்கம், திருத்தம் தொடர்பான விஷயங்களை கூறுங்கள்,' என்றார். காங்., நகர தலைவர் சேதுராமன், ''வாக்காளர் பட்டியல், பிற்சேர்க்கை என பிரித்து தருகின்றனர். ஒன்றாக சேர்த்து ஒரே நேரத்தில் வழங்க வேண்டும்'' என்றார். தெற்கு மாவட்ட தலைவர் விஜயபிரபாகர், ''மதுரை மாவட்டத்தில் 2700க்கும் மேற்பட்ட ஓட்டுச்சாவடிகள் உள்ளன. அவற்றின் பெயர் ஆங்கிலத்தில் உள்ளதை தமிழில் தரவேண்டும். தற்போது வாக்காளர்களுக்கு வண்ண அடையாள அட்டை வழங்கப்படுகிறது. ஏற்கனவே வாங்கியவர்கள் தொலைந்து போயிருந்தால் மீண்டும் விண்ணப்பிக்கின்றனர். இதுபோல பழைய அட்டை பெற்றவர்களுக்கும் புதிய வண்ண அட்டை வழங்கப்படுமா? வாக்காளர் பட்டியல் தொடர்பாக மாவட்ட அளவில் பிரச்னைகள் ஏதுமில்லை', என்றார்.
இதற்கு பதிலளித்த அதிகாரி, 'புதிதாக வரும் ஜனவரி வரை சேர்க்கப்படுவோருக்கே வண்ண அடையாள அட்டை வழங்கப்படும். பழைய அட்டை பெற்றவர்களுக்கு காலப்போக்கில் வழங்கப்படலாம், என்றார்.