அஞ்சல் துறை சார்பில் நடைபெறும் ஓவியப் போட்டியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்கலாம் என தமிழக அஞ்சல் வட்டம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அஞ்சல் வட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக அஞ்சல் வட்டம் சார்பில் ஓவியப் போட்டி நடைபெறவுள்ளது. தமிழக
அஞ்சல் வட்ட கட்டடத்தின் நூற்றாண்டுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, நவம்பர் 9-ஆம் தேதி ஓவியப் போட்டி நடத்தப்படுகிறது.
போட்டியில் 10 முதல் 15 வயதுக்குள்பட்ட பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்கலாம்.
உங்கள் அருகில் இருக்கும் அஞ்சல் நிலையங்கள், சென்னை மாநகரிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடங்கள் ஆகியவற்றை கருப்பொருளாகக் கொண்டு ஓவியங்கள் வரையப்பட வேண்டும்.
போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் ஓவியம் வரைவதற்குத் தேவையான எழுதுபொருள்களை உடன் எடுத்து வர வேண்டும். ஓவியப் போட்டியில் வெற்றி பெறும் நபர்களுக்கு குழந்தைகள் தினத்தன்று பரிசுகள் அளிக்கப்படும்.
எத்திராஜ் சாலையிலுள்ள தமிழ்நாடு அஞ்சல் வட்ட அலுவலகத்தில், காலை 10 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை போட்டி நடைபெறும்.
இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் விண்ணப்பத்தில் முழு விவரங்களைக் குறிப்பிட்டு, நவம்பர் 5-ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும்.
ஓவியப் போட்டி தொடர்பான கூடுதல் விவரங்களைத் தமிழக அஞ்சல் வட்ட அலுவலகம் மூலம் அறிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.