தொழிற்கல்வி கணினி பயிற்றுனர் பணிக்கான பதிவு மூப்பு விவரங்கள் அடங்கிய பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி வெளியிட்டுள்ள அறிக்கை:
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள தொழிற்கல்வி கணினி பயிற்றுனர் பணி காலியிடத்திற்கு சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் மாநில பதிவு மூப்பு அடிப்படையில் தகுதியுடைய பதிவுதாரர்கள் பரிந்துரை செய்யப்பட உள்ளனர். இப்பணியிடத்துக்கு பி.எட்., கல்வி தகுதியுடன் பி.இ., கணினி அறிவியல், பி.எஸ்.சி., கணினி அறிவியல், பி.சி.ஏ., பி.எஸ்.சி., தகவல் தொழில்நுட்பம் பட்டம் பெற்றவர்கள் தகுதியுடையவர்கள் ஆவர்.
வயது வரம்பு 1.7.2014 அன்று 18 வயது முதல் 57 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். மேலும், விவரங்களை www.chennai.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள உத்தேச பதிவு மூப்புக்கு உட்பட்ட சென்னை மாவட்ட பதிவுதாரர்கள் மட்டும் வருகிற 3ம் தேதிக்குள் சென்னை கிண்டி தொழிற்பேட்டை, தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தங்களுடைய பரிந்துரைத்தல் விவரங்களை நேரில் சரிபார்த்து கொள்ளலாம்.