அகடமிக் மெரிட் அடிப்படையிலான புதிய கல்விக் கொள்கை மற்றும் எந்தப் படிப்பு எந்த முறையில் கற்றுத்தரப்பட வேண்டும் என்பது குறித்தான கொள்கை உருவாக்கம் தற்போது செயல்பாட்டில் உள்ளதென்று மத்திய மனிதவள அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் மேலும் கூறியதாவது: புதிய கல்விக்கொள்கை குறித்தான கலந்துரையாடல், பிராந்திய அளவிலும், தேசிய அளவிலும்
மேற்கொள்ளப்படும். வரும் 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் முதற்கொண்டு, புதிய கல்விக்கொள்கை தொடர்பான ஆழ்ந்த விவாதம் நாடெங்கிலும் நடைபெறும் வகையிலான நிலையை எட்ட, நாங்கள் முயன்று வருகிறோம்.
எந்தப் படிப்பு, எந்த முறையில் வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டுமென்று அனைத்து தரப்பிலிருந்து வரும் ஆலோசனைகளும் பரிசீலிக்கப்படும், என்றார்.
மேலும், நான்காண்டு இளநிலைப் பட்டப்படிப்பு தொடர்பான சர்ச்சைக் குறித்து கேட்டபோது, "கடந்த 1986ம் ஆண்டு வகுக்கப்பட்ட கல்விக்கொள்கையின் அடிப்படையிலேயே பல்கலைக்கழக மானியக்குழு(UGC) செயல்பட்டு வருகிறது.
அந்தக் கொள்கைதான், 10+2+3 என்ற கல்வி அமைப்பை ஏற்படுத்தியது. சர்வ சிக்சா அபியான்(SSA) மற்றும் RTE தொடர்பான மதிப்பாய்வு நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும்.
நான் அமைச்சராக பதவியேற்று 100 நாட்கள் முடிந்த நிலையில், பல மாநில முதல்வர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்தபோது, அவர்கள், மேற்கண்ட விஷயங்களில் மதிப்பாய்வை கோரினார்கள்.
மேலும், மாநில கல்வித்துறை செயலாளர்களும், இதுதொடர்பான மதிப்பாய்வை எதிர்பார்க்கிறார்கள். எனவே, அப்பணி விரைவில் தொடங்கும்" என்றார்.