வெளிநாட்டிற்கோ, வெளிமாநிலத்திற்கோ சுற்றுலா செல்கிறீர்கள். சென்ற இடத்தில் உங்களுடைய பர்ஸ், போன், சூட்கேஸ் முதலானவை களவாடப்படுகிறது. ஹோட்டல் பில் கட்ட வேண்டும், ஊருக்குத் திரும்ப வரவேண்டும். கையில் பணமில்லை, பாஸ்போர்ட் இல்லை, உதவி கேட்கவும் ஆள் இல்லை. இந்த இக்கட்டான சூழ்நிலையில் என்ன செய்வீர்கள்?
ஹைவேயில் உங்களுடைய கார் பழுதாகி நின்றுவிடுகிறது. உதவிக்கு யாரை
அழைப்பீர்கள்? பத்து பதினைந்து கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட் இருக்கிற உங்களுடைய பர்ஸ் திருடப்படுகிறது. உடனடியாக உங்கள் வங்கிகளுக்குத் தொடர்புகொண்டு பத்து கார்டுகளையும் டீஆக்டிவேட் செய்யவேண்டும்.
உங்கள் கணக்கிலிருந்து பணம் களவாடப்படுவதை உடனடியாக தடுக்கவேண்டும். எப்படிச் செய்வது? செல்போன் தொலைந்துபோனால் உடனடியாக சிம்கார்டை லாக் செய்து, காவல்துறைக்குப் புகார் கொடுக்க வேண்டும். எப்படி?
இதுமாதிரி நெருக்கடியான நேரங்களில் அவசரமாய் உதவும் நோக்கத்தில்தான், இகக என்கிற நிறுவனம் புதியவகை சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஏறக்குறைய இன்சூரன்ஸ் பாலிஸியைப் போலவேதான் இந்தச் சேவை செயல்படுகிறது. ஐரோப்பிய நிறுவனமான சிபிபி, இந்தியாவிலும் தன்னுடைய இவ்வகைச் சேவையைத் தொடங்கியுள்ளது. கார்டு புரொடக்டர், இதுதான் இந்தச் சேவையின் பெயர்.
ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட ஒரு தொகையை இந்த நிறுவனத்தில் செலுத்திவிட்டால் போதும். மேலே குறிப்பிட்ட அசம்பாவிதங்கள் நேரும்போது முதலுதவி போல முன்னால் வந்து உதவும் இந்த நிறுவனம். எப்படி?
ஒவ்வொரு ஆண்டும் 1,400 ரூபாய் கட்டிவிடவேண்டும் (இன்சூரஸ் கட்டணம்போல). கூடவே உங்களைப் பற்றிய விவரங்களும் கிரெடிட் கார்டு தொடங்கி, பான் கார்டு வரை தொலைந்துபோனால் உடனடியாக மீட்கவும் டிஆக்டிவேட் செய்ய வேண்டியவற்றையும் குறித்த விவரங்களையும் கொடுக்கவேண்டும்.
அதற்குப் பிறகு எப்போதாவது அசம்பாவிதமாக ஏதாவது நடந்தால், சிபிபியின் கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு அழைத்தால் உங்களுடைய கிரெடிட், டெபிட் கார்டுகள், இன்னபிற கார்டுகள் வங்கிக் கணக்குகளை இந்த நிறுவனம் உங்களுடைய வேண்டுகோளின் பேரில் முடக்கும். உதவி தேவைப்பட்டால் ஆளே வந்து நிற்பார்.
பர்ஸ் திருடப்பட்டு பணத்தை இழந்து, ஹோட்டல் பில் கட்டவோ, பயணத்திற்கோ பணமின்றித் தவிக்கும்போது ஒரு லட்சத்திலிருந்து இரண்டரை லட்சம் வரை பணம் கொடுத்து உதவுகிறார்கள் (28 நாட்களுக்குள் பணத்தை திரும்பச் செலுத்த வேண்டும்). உலகம் முழுக்க இந்த உதவிகள் கிடைப்பதுதான் இதில் ஆச்சரியமே.
ஒருவேளை எங்காவது ஆள் இல்லா சாலையில் உங்கள் வாகனம் பழுதாகி நின்றுவிட்டாலும் கூட உடனடி உதவிக்கு ஆள் அனுப்பியோ அல்லது அச்சாலை வழியே வருகிற மற்ற வாகனங்கள்வழி பாதுகாப்பாக வீடு வந்து சேரவோ இந்நிறுவனம் ஏற்பாடு செய்து தரும்.
இச்சேவை பற்றிய மேலதிக விவரங்களுக்கு http://india.cppdirect.com என்ற இணையதளத்திற்குச் செல்லலாம்.