மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், செம்மினிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் 7ஆம் வகுப்பு மாணவர் ச. தினேஷ்குமார், புதிய கண்டுபிடிப்புக்கான புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது
பெற்றார்.
திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான போட்டியில் பங்கேற்ற இம்மாணவர், மலைவாழ் மக்களுக்கு நவீன தகவல் தொடர்பு சாதனத்தை செயல்முறை விளக்கம் செய்து காண்பித்து, இந்த விருதை பெற்றுள்ளார்.
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மைய இயக்குநர் டாக்டர் அய்யம்பெருமாள், மாணவருக்கு இந்த விருதை வெள்ளிப் பதக்கத்துடன் வழங்கினார். மாநில அளவில் புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது பெற்ற மாணவர் தினேஷ்குமாரை, மதுரை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சுப்பிரமணியன், உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் மூவேந்திரன், ஜான்கென்னடி அலெக்சாண்டர், தலைமை ஆசிரியர் பாலநாகம்மாள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்-ஆசிரியர் கழகத்தினர், கிராம கல்வி வளர்ச்சிக் குழு நிர்வாகிகள் உள்ளிட்டோர் பாராட்டினர்.