வங்கிக் கணக்கு இருந்தால் மட்டுமே கல்வி உதவித் தொகையை வழங்க முடியும் என வங்கி அதிகாரிகள் தெரிவிப்பதால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக மாற்றுத்திறனாளி ஆராய்ச்சி மாணவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) மூலமாக பல்வேறு ஆராய்ச்சி கல்வி உதவித் தொகைத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இந்த உதவித் திட்டங்களுக்கான
நிதிகளை, குறிப்பிட்ட வங்கிகள் மூலம் மட்டுமே யுஜிசி அறிவுறுத்தலின்பேரில் அந்தந்த பல்கலைக்கழகங்கள் வழங்கி வருகின்றன.
இதில், ஆராய்ச்சிப் படிப்புகளில் ஈடுபடும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான "ராஜீவ்காந்தி தேசியக் கல்வி உதவித் தொகைத் திட்டம்' கனரா வங்கிகள் மூலம் மட்டுமே விடுவிக்கப்படும்.
இதுபோன்ற கல்வி உதவித் திட்டத்துக்கான யுஜிசி அனுமதிக் கடிதத்துடன் வரும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு, சம்பந்தப்பட்ட வங்கிகள், தாங்களாகவே மாணவர் பெயரில் வங்கிக் கணக்கைத் திறக்க ஆவன செய்து, உதவித் தொகையை விடுவிக்க வேண்டும் என்பதுதான் நடைமுறை.
ஆனால், இது கூடுதல் வேலைப் பளு என காரணம் கூறி, சில வங்கி மேலாளர்கள் மாணவர்களின் விண்ணப்பங்களை ஏற்க மறுப்பதோடு, மாற்றுத்திறனாளி மாணவர் என்றுகூட பார்க்காமல் அலைக்கழிக்கும் செயல்களில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவர்களில் ஒருவரான சென்னைப் பல்கலைக்கழக மாற்றுத்திறனாளி ஆராய்ச்சி மாணவர் டி.எம்.என். தீபக் கூறியது:
சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொள்ளப் போகும் நான், ஆறு மாத கால தீவிர முயற்சியின் மூலம் மத்திய அரசின் ராஜீவ்காந்தி தேசிய ஆராய்ச்சி உதவித் தொகைத் திட்டத்தின் கீழ் உதவித் தொகையைப் பெறுவதற்கான உத்தரவுக் கடிதத்தை பல்கலைக்கழக மானியக் குழுவிடம் இருந்து பெற்றேன்.
அந்தக் கடிதத்தை சென்னைப் பல்கலைக்கழகத்தில் சமர்ப்பித்தபோது, அவர்கள் திருவல்லிக்கேணி கனரா வங்கியை அணுகி ஆராய்ச்சி உதவித் தொகையை விடுவிக்கக் கோருமாறு தெரிவித்தனர்.
அதன்படி, கனரா வங்கியின் திருவல்லிக்கேணி கிளைக்குச் சென்று மேலாளரைச் சந்தித்தபோது, இதே வங்கியில் வங்கிக் கணக்கு இருக்கிறதா என முதலில் கேள்வி எழுப்பினார்.
இல்லை எனத் தெரிவித்ததும், குறிப்பாக இந்தக் கிளையைத் தேர்வு செய்தது ஏன்? இந்தக் கிளை மூலம் ஏற்கெனவே 60-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உதவித் தொகை விடுவிக்கப்படுகிறது. எனவே, வேறு கிளையை அணுகுமாறு கூறி விண்ணப்பத்தை ஏற்க மறுத்துவிட்டார். மாற்றுத்திறனாளி மாணவரான நான், மிகுந்த சிரமத்துக்குப் பின்னர் அருகிலுள்ள மற்றொரு கிளைக்குச் சென்றபோது, அங்கு இந்த ஆராய்ச்சி உதவித் தொகைத் திட்டம் செயல்படுத்தப்படுவதில்லை எனத் தெரிவித்துவிட்டனர். இதனால், என்ன செய்வதென்றே தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.
உதவித் தொகைக்கான அனுமதி கிடைத்தபோதும், வங்கிகள் இதுபோல் அலைக்கழிப்பதால் ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொள்ள முடியுமா என்ற அச்சம் எழுந்துள்ளது.
என்னைப்போல் மேலும் சில மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, வங்கி உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, உதவித் தொகையை விரைவாக விடுவிக்க ஆவன செய்யவேண்டும் என்றார் அவர்.