"மாணவர்கள் சத்து மாத்திரை உட்கொள்வதை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும்"
தமிழக அரசின் உத்தரவின் படி பள்ளி மாணவர்களுக்கு இரும்புச் சத்து மாத்திரைகள் வழங்கப்படுகிறது. தவறாமல் மாத்திரை உட்கொள்வதை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உறுதி செய்யவேண்டும் என தஞ்சை
கலெக்டர் சுப்பையன் அறிவித்துள்ளார்.
தஞ்சை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு
இரும்புச் சத்து மாத்திரைகள் வழங்கிய மாவட்ட கலெக்டர் சுப்பையன் பேசியதாவது, "இரும்புச் சத்து மாத்திரைகள் உட்கொள்வதன் மூலம் ஞாபகத்திறன் அதிகரிக்கிறது. இரத்த ஓட்டம் சீராகும், பசியின்மை விலகும். ஹீமோ குளோபின் அளவு சீராகும். இரத்தசோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு நீங்கும்.
பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகள் சீராகும். குறைப் பிரசவம் மற்றும் பிரசவத்தின் போது உதிரபோக்கு ஏற்படுவதை தவிர்க்கலாம். கருவில் குழந்தையின் வளர்ச்சி சீராகும். தாய் பால் உற்பத்தி அதிகரிக்கும்.
எனவே 10 வயதுக்கு மேல் 19 வயதுகுட்பட்ட ஆண், பெண் இருதரப்பினரும் இரும்புச்சத்து மாத்திரைகளை தவறாமல் உட்கொள்ள வேண்டும். பள்ளிகளில் வாரந்தோறும் வியாழக்கிழமை தோறும், மாணவர்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகள் வழங்கப்படுகிறது.
மாணவர்கள் இரும்புச் சத்து மாத்திரைகளை உட்கொள்வதை ஆசிரியர்கள் உறுதி செய்யவேண்டும். பள்ளி விடுமுறை நாட்களில் மாணவர்கள் இரும்புச் சத்து மாத்திரைகள் தவறாமல் உட்கொள்வதை பெற்றோர்கள் உறுதி செய்யவேண்டும். வளர் இளம் பெண்கள் இரும்புசத்து மாத்திரைகள் உட்கொள்வது அவசியம் என்பதால் மதிய உணவுக்கு பின் இவற்றை தவறாமல் உட்கொள்ள வேண்டும். பள்ளி செல்லா வளர் இளம் பெண்களுக்கு அங்கன்வாடி மையங்களின் மூலமாக இரும்புசத்து மாத்திரைகள் வழங்கப்படவேண்டும்.
நிகழ்ச்சியில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் சுப்பிரமணி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தமிழரசு, மாவட்ட கல்வி அலுவலர்கள் ஜெயராஜ், மலர்கொடி, போத்திப்பிள்ளை உட்பட பலர் பங்கேற்றனர்.