பயோ-மெட்ரிக் குடும்ப அட்டைகள் எப்போது வழங்கப்படும் என்பது குறித்து உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் விளக்கம் அளித்தார்.
சட்டப்பேரவையில் கூட்டுறவு, உணவு, நுகர்வோர் பாதுகாப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
எம்.எல்.ஏ. லாசர் பேசினார். அப்போது பயோ-மெட்ரிக் குடும்ப அட்டைகள் வழங்கப்படுவது குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு அமைச்சர் காமராஜ் அளித்த பதில்:
வரும் டிசம்பருக்குள் பயோ-மெட்ரிக் குடும்ப அட்டைகளை அளிப்பதற்கு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும், அவற்றை வழங்குவதில் தாமதம் ஏற்படக் காரணம், மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்கள் முழுமையாகக் கிடைக்காததே. இந்த கணக்கெடுப்பின் விவரங்களை வைத்தே பயோ- மெட்ரிக் குடும்ப அட்டைகள் தயாரிக்கப்பட உள்ளன.
இதுபோன்ற மக்கள் தொகை கணக்கெடுப்பை தமிழகத்தில் மேற்கொள்வதற்கு ரூ.73 கோடி செலவாகும். எனவே, மத்திய அரசு தயாரித்து வரும் மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களின் அடிப்படையில் பயோ-மெட்ரிக் குடும்ப அட்டைகளைத் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் 73 சதவீதம் முடிந்துள்ளன. மீதமுள்ள பணிகள் வரும் டிசம்பருக்குள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு பயோ-மெட்ரிக் குடும்ப அட்டைகள் வழங்கும் பணிகள் தொடங்கப்படும் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.