Skip to main content

சான்றிதழ் சரிபார்ப்பில் பி.லிட்., படித்தவர்களுக்கு சிக்கல் - தினமலர்


சேலம்: ஆசிரியர் கல்வி டிப்ளமோ முடித்தவுடன், பி.லிட்., படிப்பில் சேர்ந்து படித்தவர்களை, சான்றிதழ் சரிபார்ப்பில், 'தகுதியில்லை' என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்ததால், ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில், இடைநிலை ஆசிரியர்களாக, ஆசிரியர் கல்வி டிப்ளமோவும்,
பட்டதாரி ஆசிரியர்களுக்கு பி.எட்., படிப்பும், தகுதியாக நியமிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 முடித்துவிட்டு, இரு ஆண்டுகள் ஆசிரியர் கல்வி டிப்ளமோ படிக்கும் மாணவ, மாணவியர், மூன்று ஆண்டு படிப்பான பி.லிட்., முடித்தால், பட்டதாரி ஆசிரியர்களாகவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஆசிரியர் கல்வி டிப்ளமோவை, மாநில ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் வழங்கி வருகிறது. இதில், சில ஆண்டுகளுக்கு முன், ஏராளமான தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளுக்கு, அனுமதி அளிக்கப்பட்டது. அதனால், ஆசிரியர் கல்வி டிப்ளமோ தேர்வு எழுதுவதில், தாமதம் ஏற்பட்டது.
உதாரணமாக, 2007--08 கல்வியாண்டில், இரண்டாமாண்டு தேர்வெழுதும் மாணவர்களுக்கு, 2008ம் ஆண்டு மே மாதத்துக்குள் தேர்வு நடத்தி, தேர்வு முடிவுகளை தருவது வழக்கம். ஆனால், ஆசிரியர் கல்வி டிப்ளமோ படித்தவர்களுக்கு, பல்வேறு குளறுபடிகளால், கல்வியாண்டுக்கான தேர்வு, செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடத்தப்பட்டது.

இதனால், டிசம்பர் அல்லது ஜனவரியில், தேர்வு முடிவுகள் வெளியானது. தேர்ச்சி பெற்ற பின், ஒரு கல்வியாண்டை வீணாக்கக்கூடாது என்ற எண்ணத்தில், ஏராளமானோர், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், பி.லிட்., படிப்பில் சேர்ந்தனர்.படித்து முடித்து, தற்போது ஆசிரியர் தகுதித்தேர்விலும், வெற்றி பெற்று, தங்களுக்கு அரசு வேலை கிடைத்துவிடும் என நம்பிக்கையில், சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களுக்கு, அதிர்ச்சியே, பதிலாக கிடைத்துள்ளது.

செப்டம்பர் மாதத்தில், ஆசிரியர் கல்வி டிப்ளமோவை முடித்துவிட்டு, அதே கல்வியாண்டில், பி.லிட்., சேர்ந்திருப்பதால், அந்த பட்டம் செல்லாது என, ஆசிரியர் தேர்வு வாரியம் நிராகரித்துள்ளது. அதனால், ஏராளமானோர், அதிர்ச்சியில், என்ன செய்வதென தெரியாமல், திகைத்து நிற்கின்றனர்.
இதுகுறித்து, பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கூறியதாவது:கடந்த, 2007--08ம் கல்வியாண்டில், ஆசிரியர் கல்வி டிப்ளமோ சேர்ந்து, 2008--09ம் கல்வியாண்டில், படிப்பை முடித்தோம். ஆசிரியர் கல்வி டிப்ளமோ தேர்வுகள் தாமதமாக நடத்தப்பட்டதால், செப்டம்பரில் தேர்வு நடத்தி, சான்றிதழ் வழங்கப்பட்டது. படித்த படிப்புக்கான காலம், 2008--09வுடன் முடிவடைந்துவிட்டதால், 2009--10க்கான கல்வியாண்டில், பி.லிட்., சேர்த்துக்கொண்டனர். அப்போது, பல்கலைக்கழகம், தேர்வுத்துறை உள்ளிட்டவை எவ்வித ஆட்சேபணையும் தெரிவிக்கவில்லை.

தற்போது, இத்தனை ஆண்டு காத்திருப்பில், அரசு வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில், சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டால், தகுதியில்லை என திருப்பி அனுப்புகின்றனர். இதற்கு, தேர்வர் எப்படி பொறுப்பாக முடியும் என தெரியவில்லை. 

அரசு நிறுவனமான ஆசிரியர் தேர்வுத்துறை, தாமதமாக தேர்வு நடத்தியமைக்கு, எங்கள் வாழ்க்கை பலியாகிறது.கடந்த ஆண்டில், இதேபோன்று படித்தவர்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம், பணி வழங்கியுள்ள நிலையில், நடப்பாண்டில் எங்களுக்கு மட்டும் பணிவாய்ப்பு மறுக்கப்படுவது, எந்த வகையில் நியாயம் என்றே தெரியவில்லை.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி