ஏ.ஐ.சி.டி.இ., (அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழு)யிடம், ஏற்கனவே இயங்கிவரும் தொழில்நுட்ப கல்லுாரிகள், பல்வேறு பாட பிரிவுகளுக்கு அனுமதி கேட்டும், பல புதிய கல்லுாரிகள், அனுமதி கேட்டும், 7,280
விண்ணப்பங்களை சமர்ப்பித்து இருந்தன.
இதில், 6,751 விண்ணப்பங்களை பரிசீலனை செய்து, ஏ.ஐ.சி.டி.இ., முடிவை எடுத்துவிட்டது.
கல்லுாரி கால அட்டவணையின்படி, நிலுவையில் உள்ள, 529 விண்ணப்பங்கள் மீது, ஜூன் 10ம் தேதிக்குள் முடிவை எடுக்க முடியாத நிலையை சுட்டிக்காட்டி, சம்பந்தப்பட்ட விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்குவதற்கு வசதியாக,ஒரு வாரம் கால அவகாசம் கேட்டு, உச்சநீதிமன்றத்தில், ஏ.ஐ.சி.டி.இ., மனுதாக்கல் செய்தது.இந்த மனு, உச்சநீதிமன்றத்தின் விடுமுறை கால நீதிமன்றம் முன், விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் விக்ரமஜித் சென் மற்றும் சிவகீர்த்தி சிங் ஆகியோர் அடங்கிய, டிவிஷன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு: ஏ.ஐ.சி.டி.இ., கோரிக்கை ஏற்கப்படுகிறது. அதன்படி, முதல்கட்ட கலந்தாய்வு, ஜூன் 30 என இருந்தது, ஜூலை,15 வரை நீட்டிக்கப்படுகிறது.இரண்டாம் கட்ட கலந்தாய்வை, ஜூலை 22 தேதி வரையும், மூன்றாம் கட்ட கலந்தாய்வை,ஜூலை 29ம் தேதிக்குள்ளும் முடிக்க வேண்டும். பொறியியல் வகுப்புகள், ஆகஸ்ட் 1ம் தேதி துவங்க வேண்டும்.
கல்லுாரிகளில், பல்வேறு பிரிவுகளில், நிரம்பாத இடங்கள் இருந்தால், அவற்றை, ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் நிரப்பிக் கொள்ளலாம். ஏ.ஐ.சி.டி.இ., வழங்கும் அனுமதிக்குப்பின், சம்பந்தபட்ட கல்வி நிறுவனங்களுக்கு, இணைப்பு அங்கீகாரம் வழங்குவது குறித்து, சம்பந்தப்பட்ட மாநில அரசுகள், பல்கலைகள், ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.புதிய கல்லுாரிகளை, கலந்தாய்வு பட்டியலில் சேர்க்க, சம்பந்தபட்ட மாநில அரசுகள்,பல்கலைகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த காரணங்களுக்காகத்தான், கலந்தாய்வு தள்ளி வைக்கப்படுகிறது. இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவை பிறப்பித்தனர்.