Skip to main content

மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு: இரண்டு பதில்களில் எதை அளித்தாலும் மதிப்பெண்: உயர் நீதிமன்றம் உத்தரவு - தினமணி

மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வில் ஒரு கேள்விக்கான இரண்டு பதில்களில் எதை அளித்தாலும் அதற்கு ஒரு மதிப்பெண் வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக பி.ஈஸ்வரி என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த மே 21-ஆம் தேதி நடந்தது. அந்தத் தேர்வில் நான் பங்கேற்றேன்.

அந்தத் தேர்வில் நான் 81 மதிப்பெண்கள் பெற்றேன். அந்தத் தேர்வு வினாத்தாளில் கேட்கப்பட்டிருந்த 33-ஆவது கேள்விக்கு கடலினை மட்டும் குறிக்காத சொல்லைக் கண்டெடு என்ற கேள்விக்கு டி என்ற வாய்ப்பில் கொடுக்கப்பட்ட சமுத்திரம் என்பதை பதிலாக அளித்தேன். ஆனால், அந்தக் கேள்விக்கு எனக்கு மதிப்பெண் வழங்கவில்லை.

ஆனால், ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டிருந்த விடையில் 33-ஆவது கேள்விக்கு, பி என்ற வாய்ப்பில் கொடுக்கப்பட்ட ஆழி என்பதுதான் சரியான விடை எனத் தெரிவித்தது. அதற்கு என்னுடைய எதிர்ப்பை தெரிவித்தேன். எனவே, எனக்கு உரிய மதிப்பெண் வழங்கி பணியில் நியமிக்க உத்தரவிட வேண்டும் என கோரினார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எஸ்.நாகமுத்து முன்பு நடந்தது. விசாரணையின்போது, தமிழில் நிபுணத்துவம் பெற்ற பல்வேறு பள்ளிகளில் பணிபுரியும் முதுநிலை தமிழ் ஆசிரியர்கள் 3 பேரிடம் இருந்து கருத்து கேட்கப்பட்டது. அவர்கள் ஆழிதான் சரியான பதில் எனத் தெரிவித்தனர். மேலும், சமுத்திரம் என்பது தமிழ்ச் சொல் இல்லை என்றும், வடமொழி சொல் எனவும் தெரிவித்தனர். அதனால், சமுத்திரம் என்பது சரியான பதில் இல்லை எனத் தெரிவித்தனர்.

விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு: கடலினை மட்டும் குறிக்காத சொல்லைக் கண்டெடு... என்ற கேள்விக்கு, 4 வாய்ப்புகளாக (ஏ) முந்நீர், (பி) ஆழி, (சி) பரவை, (டி) சமுத்திரம் என கொடுக்கப்பட்டன. இதில், (பி) ஆழிதான் சரியான பதில். அந்தச் சொல்லுக்கு, மோதிரம், சக்கரம், கடல் என்று 3 வெவ்வேறு பொருள்கள் உண்டு என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.




மனுதாரர் தரப்பில் ..சமுத்திரம்... என்ற சொல்லுக்கு கடல், ஓர் எண், மிகுதி என்ற வெவ்வேறு பொருள்கள் உண்டு எனவும், சென்னைப் பல்கலைக்ழகத்தால் வெளியிடப்பட்ட தமிழ் அகராதியில் கடல், பேரெண், மிகுதி என பொருள் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, வேறு 2 தமிழ் அகராதிகளிலும் இது போன்ற பதில் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.
நீதிமன்றம் நியமித்த தமிழ் நிபுணர்கள், "சமுத்திரம்' என்பது வடமொழிச் சொல்.

அதனால், அது சரியான பதில் இல்லை எனத் தெரிவித்தனர். "சமுத்திரம்' என்பது தமிழ்ச் சொல் இல்லையென்றால், தமிழ் அகராதியில் அந்த சொல் இடம் பெற்றிருக்காது. ஆனால், தமிழ் அகராதியில் அதற்கு 3 பொருள்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

அதனால், ஆசிரியர் தகுதித் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விக்கு கொடுக்கப்பட்ட பதில் முழுவதும் (நான்கும்) சரியானது இல்லை. அதேபோல் மனுதாரருக்கு எந்த ஒரு நன்மை வழங்கினாலும், அது தொடர்பான மற்றவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.

எனவே, ஆசிரியர் தகுதித் தேர்வில் கேட்கப்பட்ட 33-ஆவது கேள்விக்கு பி மற்றும் டி பதில் அளித்திருந்த அனைத்து தேர்வர்களுக்கும் ஆசிரியர் தேர்வு வாரியம் ஒரு மதிப்பெண் வழங்க வேண்டும்.

மேலும், அனைத்து விடைத்தாள்களையும் ஆசிரியர் தேர்வு வாரியம் மறுமதிப்பீடு செய்து, திருத்தப்பட்ட தேர்ச்சிப் பட்டியலை வெளியிட வேண்டும். இந்த பணியை ஒரு வாரத்துக்குள் ஆசிரியர் தேர்வு வாரியம் முடிக்க வேண்டும் என உத்தரவில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு