திண்டுக்கல் மாவட்ட சிறுபான்மையின மாணவர்களின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கலெக்டர் வெங்கடாசலம் கூறியதாவது: கிறிஸ்தவ, இஸ்லாமிய, சீக்கிய, பார்சி, ஜெயின், புத்த மதத்தை சேர்ந்த சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இதில், அரசு மற்றும் உதவிபெறும் கல்வி நிறுவனங்களில் பிளஸ் 1, பிளஸ் 2,
ஐ.டி.ஐ., ஐ.டி.சி., பாலிடெக்னிக், இளங்கலை, முதுகலை, எம்.பில்., பி.எச்.டி. பயிலும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தில் புதிய விண்ணப்பங்களை செப்.15க்குள்ளும், புதுப்பித்தலுக்கு அக்.10க்குள்ளும் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.
பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். முந்தைய வகுப்பின் இறுதித்தேர்வில் 50 சதவீத மதிப்பெண்களுக்கு குறையாமல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, www.momascholarship.gov.in என்ற இணையதள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
பின், விண்ணப்பத்தில் கையெழுத்திட்டு மதிப்பெண், ஜாதி, வருமான சான்று நகல், கல்வி கட்டணம் செலுத்திய ரசீது, இருப்பிட முகவரி, வங்கி கணக்கு எண் ஆகியவற்றை இணைத்து செப்.25க்குள்ளும், புதுப்பித்தல் விண்ணப்பத்தை அக்.,20க்குள்ளும் கல்வி நிலையங்களில் மாணவர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
கல்வி நிலையங்கள் விண்ணப்பங்களை சரிபார்த்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் அக்.5க்குள்ளும், புதுப்பித்தல் விண்ணப்பங்களை அக்.31க்குள்ளும் ஒப்படைக்க வேண்டும், என்றார்.