வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போர் உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
திருவண்ணாமலை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து 5 ஆண்டு காத்திருப்பவர்கள் உதவிதொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர்
ஞானசேகரன் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை கலெக்டர் ஞானசேகரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தொடர்ந்து புதுப்பித்து வந்து 31.3.2014ம் தேதி வரை பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். மாற்று திறனாளிகள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 1 ஆண்டு முடிந்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்பு அலுவலத்தில் பதிவுசெய்து 5ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்கும் இளைஞர்கள் உதவிதொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்குட்பட்டவர்களாகவும், பிசி,எம்பிசி மற்றும் இதர வகுப்பினர் 40 வயதிற்குட்பட்டவர்களாகவும் ஆண்டு வருமானம் 50 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும்.
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.100, தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.150, மேல்நிலைப்படிப்பு முடித்தவர்களுக்கு ரூ.200, பட்டதாரிகளுக்கு ரூ.300 மாதம் தோறும் உதவிதொகையாக வழங்கப்படும். மாற்று திறனாளிகள் 10ம் வகுப்பு தேர்ச்சி, தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.300, 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.375, பட்டதாரிகளுக்கு ரூ.450 மாதம் தோறும் உதவிதொகையாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்க உள்ளவர்கள் திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம் அல்லது வேலைவாய்ப்புதுறை இணையதளத்தின் மூலம் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்தோ அல்லது விண்ணப்பபடிவத்தினை நகல் எடுத்தோ விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே உதவிதொகை பெற்று வருபவர்கள் தொடர்ந்து உதவி தொகை பெற வேலையில் இல்லை என்பதற்கான உறுதிமொழி ஆவணத்தினை வழங்கவேண்டும்.
இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.