Skip to main content

செயல்திறன் அடிப்படையில் ஊக்கத்தொகை

செயல்திறன் அடிப்படையில் ஊக்கத்தொகை: மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்க திட்டம்

மத்திய அரசு ஊழியர்களுக்கு செயல்திறன் அடிப்படையிலான ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, அமல்படுத்தலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாக, மத்திய அரசு அதிகாரிகள் கூறியதாவது: 'மத்திய அரசு ஊழியர்களுக்கு, அவர்களின் திறமை மற்றும் செயல்திறன் அடிப்படையில்,
ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை அமல்படுத்தலாம்' என, ஆறாவது சம்பள கமிஷன் பரிந்துரை செய்தது. இதை, மன்மோகன் சிங் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, ஏற்றுக் கொண்டாலும், கொள்கை அளவில் மட்டுமே ஒப்புதல் அளித்தது. இந்த செயல்திறன் அடிப்படையிலான ஊக்கத்தொகை குறித்து, பிரதமர் நரேந்திர மோடியிடம், மத்திய பணியாளர் நலத்துறை அதிகாரிகள், விரைவில் விளக்கம் அளிக்க உள்ளனர். அப்போது, ஊக்கத் தொகை திட்டத்திற்கு மோடி ஒப்புதல் அளித்து விட்டால், விரிவான வழிகாட்டிக் குறிப்புகள் தயார் செய்யப்படும். ஏற்கனவே இதுதொடர்பாக, முந்தைய ஆட்சியில், வரைவு வழிகாட்டிக் குறிப்புகள் தயார் செய்யப்பட்டுள்ளன. இந்த வரைவு வழிகாட்டிக் குறிப்புகளுடன், மோடி தெரிவிக்கும் யோசனைகளின் அடிப்படையில், புதிய விதிமுறைகள் இடம் பெறும். நாடு முழுவதும், மத்திய அரசு ஊழியர்கள், 50 லட்சம் பேர் உள்ளனர். அவர்களை சிறப்பாக செயல்பட வைத்து, மக்களுக்கு அதிகபட்ச நலன் கிடைக்க, மத்திய பணியாளர் நலத்துறை, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இந்தச் செயல்திறன் அடிப்படையிலான ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் அமலுக்கு வந்தால், ஒவ்வொரு ஆண்டும், ஊழியர்களின் செயல்பாடுகளுக்கு ஏற்ற வகையில், மாறுபட்ட சம்பளம் வழங்கப்படும். இந்தத் திட்டம், தனி நபர்கள் என்ற அளவிலோ அல்லது ஒரு குழு என்ற அளவிலோ அமல்படுத்தப்படும். இவ்வாறு, மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

எப்படி இருக்கும்?

* உதாரணமாக, ஒரு போலீஸ் அதிகாரி, குற்றங்களை குறைப்பதில் சிறப்பாக செயல்பட்டால், அவருக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.

* ஊக்கத்தொகை வழங்கப்படுவதால், வழக்கமான சம்பள உயர்வு, பதவி உயர்வில் பாதிப்பும் ஏற்படாது. 

* ஊக்கத்தொகை, ஒவ்வொரு ஆண்டின் செயல்பாட்டில் வழங்கப்படும்.

* இதற்காக, துறை வாரியாக ஆவணம் தயார் செய்யப்படும். 

* திறமையான அதிகாரிகளுக்கு கூடுதல் சம்பளம் நிச்சயம். 

* ஏற்கனவே இம்முறை பல தனியார் நிறுவனங்களில் பல ஆண்டுகளாக திறம்பட பின்பற்றப்படுகிறது.

* ஆறாவது சம்பள கமிஷன், நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் அமைக்கப்பட்டது.

ஊழியர் சங்கம் எதிர்ப்பு:

''உற்பத்தியில் ஈடுபடாத, சேவை நோக்கை மட்டுமே கொண்ட, மத்திய அரசுத் துறை ஊழியர்களுக்கு, பணி திறன் அடிப்படையிலான ஊக்கத் தொகை திட்டம் பொருந்தாது; சாத்தியமும் இல்லை,'' என, மத்திய அரசு ஊழியர்கள் சம்மேளனம் கூறியுள்ளது.

இதுகுறித்து, சம்மேளனத்தின் பொருளாளர், சுந்தரமூர்த்தி கூறியதாவது: மத்திய அரசில், 110 துறைகள் உள்ளன. இவற்றில், 32 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். ஒரு துறையின் செயலர் முதல் கடைநிலை ஊழியர் வரை, ஒன்றிணைந்து தான், வேலை செய்ய முடியும். இவர்களில், யாரையும் தனித்து ஒரு வேலைக்கு மதிப்பிட முடியாது. ஆறாவது ஊதியக் குழுவின், பணி திறன் அடிப்படையிலான ஊக்கத் தொகையை, ஏற்கனவே எதிர்த்துள்ளோம். மத்திய அரசுத் துறைகள் லாப நோக்கில் செயல்படுவதில்லை. எந்த உற்பத்தியையும் மேற்கொள்வதில்லை. மக்கள் நலனுக்கான சேவையை செய்து வருகின்றனர். உற்பத்தியை மையமாகக் கொள்ளாத அரசு துறைகளில், பணி திறனை எப்படி கணக்கிட முடியும் என, தெரியவில்லை. பணித் திறன் அடிப்படையிலான ஊக்கத் தொகை என்பது, மூத்த அதிகாரிகளின் விருப்பு, வெறுப்புகளுக்கு உட்பட்டதாக முடியும். மேலும், அதிகாரிகளை திருப்தி செய்பவர்களுக்கு, ஊக்கத் தொகை அளிப்பதாக அமையும். இதனால், ஊழியர்கள் மத்தியில் தேவையற்ற பிரிவினையை ஏற்படுத்தும். எனவே, பணி திறன் அடிப்படையிலான ஊக்கத் தொகைத் திட்டத்தை, மத்திய அரசு ஊழியர்கள் சம்மேளனம் எதிர்க்கிறது. இத்திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம்.

எது செயல்திறன் அடிப்படை?

செயல்திறன் அடிப்படையிலான சம்பளம் என்பது, ஒவ்வொரு ஆண்டும் அல்லது குறிப்பிட்டகால இடைவெளியில் வழங்கப்படும். ஒவ்வொரு தனி நபரின் அல்லது குழுவினரின் செயல்பாடுகளுக்கு ஏற்ற வகையில், மாறுபட்ட வீதத்தில் வழங்கப்படும். ஐந்தாவது சம்பள கமிஷன், தன் பரிந்துரையில், 'மிகச்சிறப்பாக செயல்படுவோருக்கு கூடுதல் சம்பள உயர்வு வழங்கலாம் என, தெரிவித்துள்ளதோடு, சிறப்பாக செயல்படாத நபர்களுக்கு, வழக்கமான சம்பள உயர்வை மறுக்கலாம்' என்றும் கூறியுள்ளது.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி கவுன்சில் - விசிட்டிங் பெல்லோஷிப்ஸ்

கல்வித் தகுதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் மருத்துவத்தில் எம்.டி., பட்டம் அறிவியலில் பி.எச்டி., பட்டம் வயது : 50 வயதிற்கு கீழ் இதர தகுதிகள் விண்ணப்பிப்பவர், அங்கீகரிக்கப்பட்ட அறிவியல் / தொழில்நுட்ப நிறுவன