தமிழகத்தில் வரும் 2015ம் ஆண்டு அரசின் அனைத்து திட்டங்களும் ‘பேப்பர்‘ நடைமுறையில் இருந்து ஆன்லைன் திட்டத்திற்கு மாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நலத்திட்டங்கள், பயன்பாட்டு கிராமங்கள், இலவச பொருட்கள் என அனைத்தும் இனி ஆன்லைன் மூலமாகவே
செயல்படுத்தப்படும். பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் ஆன்லைனில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்படும். மாநில அளவில் 220 தாலுகாக்கள் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு வருகிறது. கிராம நிர்வாக அலுவலர்களுக்கு லேப் டாப் பயிற்சி தரப்பட்டுள்ளது. இதற்காக மாநில அளவில் 26 நலத்திட்டங்களுக்கான தொலைநோக்கு திட்டம் உருவாக்கப் பட்டுள் ளது. மாநில குடியுரிமை புள்ளி விவர தொகுப்பு (ஸ்டேட் ரெசிடென்ட் டேட்டா ஹப்) ஆய்வு பணி விரைவில் துவக்கப்படவுள்ளது.
120 நாளில் மொத்த பணிகளும் முடிக்கப்படும். வரும் ஆண்டில் பழைய ரேஷன் கார்டுகளை மாற்றி விட்டு ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்குவது இந்த ஆய்வின் பிரதான இலக்காக இருக்கிறது. இதுகுறித்து வருவாய்த்துறையினர் கூறுகையில், ‘‘மாநிலத்தில் 1.95 கோடி ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் இருக்கிறது. இவற்றை ஆன்லைனில் சரிபார்ப்பதன் மூலமாக போலி ரேஷன் கார்டுகளை ஒழித்து பழைய ரேஷன் கார்டிற்கு மாற்றாக ஸ்மார்ட் கார்டு வழங்க முடியும். மருத்துவ காப்பீடு அட்டை போல் இனி ரேஷன் கார்டும் மாறி விடும். புதிய உறுப்பினர்களை எளிதில் சேர்க்க முடியும், நீக்க முடியும். மாநில அளவில் 28.40 லட்சம் பேர் வருவாய், சமூக நலத்துறையில் உதவி தொகை பெறுகின்றனர். ஆதார் அடையாள அட்டை கணக்கெடுப்பு உதவியுடன் விவரங்களை தொகுத்து உண்மையாக உதவி தொகை பெறுபவர்கள், உயிருடன் இருப்பவர்கள், இல்லாதவர்கள் விவரங்களை சேகரிக்க முடியும்.
1.23 கோடி பேர், தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பயனாளிகளாக உள்ளனர். இவர்களின் விவரங்களும் ஆன்லைன் மயமாக்கப்படும். 1.36 கோடி குடும்பத்தினர் மருத்துவ காப்பீடு செய்துள்ளனர். 17 நலத்திட்ட அமைப்புகளின் மூலமாக 3.34 லட்சம் பேர் பயன்பெறுகின்றனர். கல்வித்துறையில் பல லட்சம் பேர் பயனடைகின்றனர். அனைத்து விவரங்களையும் குடியுரிமை திட்டத்தில் தொகுப்பதன் மூலமாக உதவி திட்டங்கள், வளர்ச்சி பணிகளை எளிதாக நிறைவேற்ற முடியும். பொதுமக்கள் பல முறை கோரிக்கை மனுக்கள் கொடுத்து ஏமாற்றத்தில் தவிக்கவேண்டிய நிலையிருக்காது, ‘‘என்றனர்.