மழை நீர் சேமிப்பு தொட்டி அவசியம் : தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவு
ஜூன் 30க்குள் பள்ளிகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைத்து, அதன் பயன்களை மாணவர்களிடம் எடுத்துக்கூற வேண்டும். இதுகுறித்து போட்டோவுடன் ஆவணத்தை, ஒவ்வொரு பள்ளியும், அரசிடம் தனித்தனியே சமர்ப்பிக்க வேண்டும் என பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை
உத்தரவிட்டுள்ளது.காற்றழுத்த தாழ்வு மண்டலம், வெப்ப சுழற்சி உள்ளிட்டவற்றால், மழை பெய்திருந்தாலும், பருவ மழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யாமல் போவதால், ஒவ்வொரு ஆண்டும் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கொண்டே இருக்கிறது. இதுதொடர்பாக, மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி, மெட்ரிக் என அனைத்து வகையான பள்ளிகளும், ஜூன் 30க்குள் தங்கள் பள்ளிகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க வேண்டும். மழை பெய்யும்போது, மொத்த நீரும் அதில் சேகரமாகும் வகையில் ஏற்பாடு செய்திருக்க வேண்டும்.பொதுப்பணி, குடிநீர் வடிகால் வாரியம், வேளாண் துறை அதிகாரிகளை ஒருங்கிணைத்து மழைநீர் சேகரிப்பு குறித்து ஆய்வு கூட்டம், ஓவியம் மற்றும் கட்டுரை போட்டி மாணவர்களுக்கு நடத்த வேண்டும்; தினமும் பள்ளியின் கரும்பலகையில் மழைநீர் சேமிப்பை வலியுறுத்தி, ஏதேனும் ஒரு கருத்து எழுதி போட வேண்டும்; இறைவணக்க
கூட்டங்களில் மாணவர்களிடம் இதுகுறித்து அறிவுறுத்த வேண்டும்.பள்ளியில் மழைநீர் தொட்டி அமைத்தது; மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியது; போட்டி நடத்தியது குறித்து, வரும் ஜூன் 30க்குள் போட்டோவுடன் அரசுக்கு ஆவணம் சமர்ப்பிக்க வேண்டும். சிறந்த பள்ளியை தேர்ந்தெடுத்து, பரிசு வழங்கும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதன்மை கல்வி அலுவலர் மூலம், இந்த உத்தரவு, தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.