பாலியல் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்க நடவடிக்கை: அரசு உத்தரவு
பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு தண்டனை கிடைப்பதில் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என, தமிழகம் முழுவதும் மாவட்ட
குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்களுக்கு, கமிஷனர் அலுலகத்தில் இருந்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன் விபரம்: சமீபகாலமாக, தமிழகத்தில் குழந்தைகள் பாலியல் குற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு துன்புறுத்தப்படுவதும், கொல்லப்படுவதும் அதிகரித்து வருகிறது. குழந்தைகளின் வாழ்வுரிமைக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் தண்டனைகளில் இருந்து தப்பிப்பதை தடுக்கவும், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எதிர்கால நலனை உறுதிப்படுத்த வேண்டும். பாலியல் குற்றங்களில் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு கல்வி மற்றும் மருத்துவ உதவிகள் வழங்குவதோடு, இது குறித்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதா? வழக்கின் தற்போதைய விபரம் என்ன? என்ற தகவலை மாதந்தோறும் 15ம் தேதிக்குள், குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிஷனருக்கு தெரியப்படுத்த வேண்டும். தவிர, பாலியல் குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத்தரவும் விழிப்புணர்வு காட்ட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.