சத்துணவு கூடங்களுக்கு முட்டை சப்ளை செய்ய மாநில அளவில் ஒரே டெண்டர் விட்டது சரியானதுதான் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 2 ஸ்டார் கோழி பண்ணை, எஸ்எஸ்.என் கோழி பண்ணை ஆகிய நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில்
தாக்கல்செய்த மனு: தமிழகம் முழுவதும் சத்துணவு கூடங்களுக்கு முட்டை சப்ளை செய்ய மாவட்ட அளவில் அரசு டெண்டர் விட்டு வந்தது. இந்த டெண்டர் முறையை மாற்றி கடந்த ஆண்டு அரசு மாநில அளவில் ஒரே டெண்டர் விட்டது. இதில் பல நிறுவனங்கள் கலந்து கொண்டன. நேச்சுரல் புட் நிறுவனம், சொர்ணபூமி நிறுவனம் ஆகிய 2 நிறுவனங்களுக்கு அரசு டெண்டர்விட்டது. இது சட்டவிரோதமானது. இதை ரத்து செய்யவேண்டும். மாவட்ட அளவில் டெண்டர் விட உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர். இந்த மனுவை நீதிபதி அரிபரந்தாமன் விசாரித்து, மாநில அளவில் டெண்டர் விட்டது சரியானதுதான் என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து 2 நிறுவனங்களும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை நீதிபதிகள் பால்வசந்தகுமார், சத்தியநாராயணன் ஆகியோர் விசாரித்தனர். அப்போது அரசு சார்பாக கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த்பாண்டியன் ஆஜராகி, சத்துணவு கூடங்களுக்கு முட்டை சப்ளை செய்ய மாநில அளவில் டெண்டர் விடுவது அரசின் கொள்கை முடிவு. இதில் நீதிமன்றம் தலையிடக்கூடாது.
இதுதவிர டெண்டர் விட்டு ஓராண்டாகிவிட்டது. இந்த ஆண்டு டெண்டருக்கு விண்ணப்பம் வரவேற்கப்பட்டுள்ளது. இதில் விரைவில் அரசு முடிவு எடுக்க அரசு உள்ளது. எனவே அப்பீல் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார். இதை கேட்ட நீதிபதிகள் நேற்று அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது: சத்துணவு கூடங்களுக்கு முட்டை சப்ளை செய்ய மாநில அளவில் டெண்டர் விடுவதற்கு அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. இதில் நீதிமன்றம் தலையிட முடியாது. இதுதவிர டெண்டர்விட்டு ஓராண்டு கடந்து விட்டது. அடுத்த ஆண்டுக்கு புதிய டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே கடந்த ஆண்டு விட்ட டெண்டரை ரத்து செய்ய முடியாது. மாவட்ட அளவில் டெண்டர் விடுவதை மாற்றி அரசு புதிய டெண்டர் விதிமுறையை கொண்டு வந்துள்ளது சரியானதுதான். எனவே அப்பீல் மனுவை தள்ளுபடி செய்கிறோம். இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.