Skip to main content

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: காலை 8.15 மணிக்குள் மையத்துக்குள் செல்ல வேண்டும்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை (26) துவங்குகிறது; அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. முறைகேடுகளை தடுக்க, பறக்கும் படை குழுககளும் அமைக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், கடந்த சில நாட்களாக ஏற்படும் மின்வெட்டால், தேர்வுக்கு தயாராக முடியாமல், மாணவ - மாணவியர் அவதிப்படுகின்றனர். பிளஸ் 2 பொதுத்தேர்வு, இன்றுடன் நிறைவடைகிறது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை (26) துவங்குகிறது. 26ம் தேதி மொழி முதல் தாள், 27ல் மொழி இரண்டாம் தாள், ஏப்., 1 ஆங்கிலம் முதல் தாள், 2ல் ஆங்கிலம் இரண்டாம் தாள், 4ல் கணிதம், 7ல் அறிவியல், 9ல் சமூக அறிவியல் தேர்வுடன் நிறைவடைகிறது.திருப்பூர் மாவட்டத்தில், மொத்தம் 79 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 1,750 தனித்தேர்வர்கள் உட்பட 29 ஆயிரத்து 765 மாணவ, மாணவியர் தேர்வு எழுதுகின்றனர். முத்தூர் விவேகானந்தா பள்ளி, தாராபுரம் பொன்னு மெட்ரிக் பள்ளி, கூலிபாளையம் விகாஸ் வித்யாலயா மற்றும் பொங்குபாளையம் விக்னேஸ்வரா பள்ளி ஆகிய நான்கு மையங்களில், தனித்தேர்வர் எழுதுகின்றனர். "தட்கல்' முறையில் விண்ணப்பித்த தேர்வர்கள், உடுமலை பி.கே.ஆர்., பள்ளியில் தேர்வு எழுத உள்ளனர்.இம்முறை காலை 9.15 மணிக்கு தேர்வு துவங்குகிறது. வினாத்தாள் வாசிக்கவும், விடைத்தாளில் விவரம் பூர்த்தி செய்யவும் 15 நிமிடம் தரப்படும். 9.30 முதல் 12.00 மணி வரை, இரண்டரை மணி நேரம் தேர்வு எழுத மாணவர்களுக்கு அவகாசம் அளிக்கப்படும். பிளஸ் 2 தேர்வில், வழங்கியதுபோல், பத்தாம் வகுப்புக்கும் கூடுதலாக 30 பக்க விடைத்தாள் வழங்கப்படுகிறது. அதன் முகப்பில், "டாப்சிலிப்' தைக்கப்பட்டுள்ளது.தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், ஆசிரியர்கள் என 1,600 ஆசிரியர்கள், பொதுத்தேர்வு பணியில் ஈடுபடுகின்றனர். முறைகேடுகளை தடுக்க, மாவட்ட கல்வி அலுவலர் தலைமையில், 162 பேர் கொண்ட பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்களில், குடிநீர், கழிப்பிடம், காற்றோட்ட வசதி மற்றும் போதிய வெளிச்சம் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு நடத்தினர்.
ஆசிரியர்கள், தேர்வு துவங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக, காலை 8.15 மணிக்குள் மையத்துக்குள் செல்ல வேண்டும் எனவும், கட்டுக்காப்பகங்களில் இருந்து, வினாத்தாள்களை மையங்களுக்கு கொண்டு செல்லுதல், விடைத்தாள்களை திரும்ப எடுத்துச் செல்லுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளில், பிளஸ் 2 பொதுத்தேர்வு விதிமுறைகளையே பின்பற்ற வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்ட கல்வி அலுவலர் கரோலின் கூறுகையில், ""பொதுத்தேர்வுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் ஜரூராக நடந்து வருகின்றன. "டாப் சிலிப்' தைக்கப்பட்ட விடைத்தாள்கள், தேர்வு மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன,'' என்றார். மீண்டும் மின்வெட்டு மாணவர்கள் அதிர்ச்சி: சில நாட்களாக, முன்னறிவிப்பின்றி அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. சில தருணங்களில், தொடர்ச்சியாக மூன்று மணி நேரம் மின் சப்ளை இருப்பதில்லை. மின்தடையால், தேர்வுக்கு படிக்கும் மாணவ, மாணவியர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். குடியிருப்பு பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்களில் ஜெனரேட்டர் பயன்படுத்துவதால், அதிக இரைச்சலில், மாணவர்கள் படிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். கொசுக்கடி, புழுக்கம் போன்ற பாதிப்புகளால், இரவில் தூங்க முடியாமல் தவிக்கின்றனர்.மின் உற்பத்தி குறைவு, கோடை காலம் துவங்கியதால் மின்சாதனங்கள் பயன்பாடு அதிகரிப்பு என மின் தடைக்கு காரணங்கள் சொல்லப்படுகின்றன. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் எதிர்கால நலன் கருதி, தேர்வு முடியும்வரை மின்வெட்டு தொடராமல் தடுக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண் டும் என மாணவர்களும், பெற்றோரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்