Skip to main content

தேர்தல் பணியில் இருந்து தலைமை ஆசிரியர்களுக்கு விலக்கு?

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுப் பணிகளில் ஈடுபட வேண்டியிருப்பதால், மக்களவைத் தேர்தல் பணியில் இருந்து தலைமை ஆசிரியர்களுக்கு விலக்கு அளிப்பது குறித்து மாவட்ட நிர்வாகம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகம் முழுவதிலும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் வருகிற மார்ச் 3ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி நிறைவடைகின்றன. இதைத்தொடர்ந்து, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 26ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 9ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.
நிகழாண்டு முதல் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 40 பக்கங்கள் கொண்ட பிரதான விடைத்தாள்கள் அளிக்கப்படுகின்றன. அதோடு மாணவ, மாணவிகளின் பெயர், புகைப்படம், தேர்வு எண், பாடத் தேர்வு ஆகியவற்றைக் குறிப்பிடுவதற்காக தனியாக தாள் இணைக்க வேண்டும். இந்தத் தாளை 40 பக்கங்கள் கொண்ட பிரதான விடைத்தாளுடன் இணைத்து தைக்க வேண்டும்.
தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் அதற்கு மேல்பட்ட தாளில் விடைகளை எழுதும் நிலை ஏற்பட்டால், தனியாக அளிக்கப்படும் தாள்களை பிரதான விடைத்தாளுடன் இணைத்து நூல் மூலம் கட்டி தேர்வரிடம் அளிக்க வேண்டும்.
இந்தப் பணி மட்டுமன்றி, தேர்வு மையத்தில் மாணவர்கள் அமருமிடத்தில் எழுதப்படும் தேர்வு எண் உள்ளிட்ட தேர்வு தொடர்பான அனைத்துப் பணிகளையும் பள்ளித் தலைமை ஆசிரியர் நேரடிப் பார்வையில் செய்ய வேண்டும் என தேர்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் 94 மேல்நிலைப் பள்ளி, 125 உயர்நிலைப் பள்ளிகள், ஆயிரத்துக்கும் அதிகமான தொடக்கப் பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளில் சுமார் 6 ஆயிரம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இவர்களை மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபடுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. இதன்படி, பணியாற்றும் ஆசிரியர்களின் பட்டியலைத் தயார் செய்து அந்தந்தக் கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் தேர்தல் பணிக்கான உத்தரவு அளிக்கப்பட்டு வருகிறது.
மேல்நிலை, உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தினால், தேர்வுப் பணியில் சுணக்கம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் அவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என பல மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அதேபோல, தருமபுரி மாவட்டத்தில் உள்ள தலைமை ஆசிரியர்கள் தங்களுக்கு உள்ள பணிச்சுமையை கருத்தில் கொண்டு, தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி முதன்மைக் கல்வி அலுவலர் மூலம் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில், தேர்தல் பணி தொடர்பான முதல் கூட்டம் அந்தந்த வட்டத்தில் புதன்கிழமை (பிப்.26) நடைபெற உள்ள நிலையில், இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் நல்லதொரு முடிவை எடுக்கும் என்ற நம்பிக்கையில் தலைமை ஆசிரியர்கள் உள்ளனர்.

Comments

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா